சீனாவில் வீடுகளை குளிர்விக்கும் மிஸ்ட் தொழில்நுட்பம் – கூரை குளிர்விப்பு முறையால் நிமிடங்களில் குறையும் வெப்பநிலை!
திடீர் மழை பெய்யுமோ என்று தோன்றும் இந்த காட்சி, உண்மையில் கோடைக்காலக் கடும் வெப்பத்திலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்கும் ஒரு புத்திசாலித்தனமான குளிர்விப்பு முறையாகும்.
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், கட்டிடங்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள நுணுக்கமான ‘மிஸ்ட்’ முனைகள், மிக மெல்லிய நீர் மூடுபனியைத் தெளிக்கின்றன. இது கட்டிடங்களின் கூரைகளையும் வெளிச் சுவர்களையும் உடனடியாகக் குளிர்விக்கிறது.
இந்த நுண்ணிய நீர்த்துளிகள் ஆவியாகும்போது, சுற்றியுள்ள மேற்பரப்புகளில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சுகின்றன. இதன் மூலம், சாதகமான சூழ்நிலைகளில், கட்டிடத்தின் கூரை வெப்பநிலையை சில நிமிடங்களிலேயே சுமார் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடிகிறது.
மனித உடல் வியர்ப்பதன் மூலம் குளிர்ச்சியடைவது போன்ற அதே ஆவியாதல் குளிர்விப்பு தத்துவமே இதிலும் பயன்படுத்தப்படுகிறது. கட்டிடக்கலையில் இத்தகைய ஆவியாதல் குளிர்விப்பு முறைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சர்வதேச எரிசக்தி முகமை மற்றும் நகர்ப்புற வெப்பத்தைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், இத்தகைய ‘மிஸ்ட் மற்றும் பிரதிபலிக்கும் குளிர்விப்பு தொழில்நுட்பங்களை, வெப்ப அழுத்தத்தைக் குறைப்பதற்கும், ஏர் கண்டிஷனர்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் சிறந்த வழிகளாகக் குறிப்பிடுகின்றனர்.
நகரங்களில் வெப்பம் அதிகரித்து வரும் சூழலில், இது போன்ற எளிமையான பொறியியல் நுணுக்கங்கள் அன்றாட வாழ்க்கையை மிகவும் வசதியானதாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

