கொழும்பில் பிஃபா உலகக்கோப்பைக் ரசிகர் வலயம் (Fan Zone) திறப்பு!
கொழும்பு கோட்டை யோர்க் வீதியில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலுக்கு முன்பாக, 2026 பிஃபா உலகக்கோப்பை போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ ரசிகர் வலயம் (Fan Zone) நேற்று முன்தினம் (11) திறந்து வைக்கப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, இலங்கையின் விளையாட்டுச் சுற்றுலாத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகும்.
இங்கு விசேட உரையாற்றிய அமைச்சர், இலங்கையில் சர்வதேச தரம் வாய்ந்த கால்பந்து மைதானம் ஒன்றை அமைப்பதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) இணக்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்காக நீர்கொழும்பு, கடல்கலை மைதானக் காணி தெரிவு செய்யப்பட்டு, முதற்கட்ட சட்ட நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளை நடாத்தவும், நீர்கொழும்பு சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் உதவும் என்றார்.
மேலும், கடந்த மே 31 ஆம் திகதியளவில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துள்ளதாகவும், கிரிக்கெட்டைப் போல கால்பந்தும் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

