ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு இளநீர் செய்கையை முறைப்படுத்துவதற்கான விசேட திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில் நேற்று (11) பிற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
தற்போது சிதறிக்காணப்படும் இளநீர் செய்கையை முறையான, தரப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட ஒரு விவசாய வணிகமாக அபிவிருத்தி செய்வது குறித்தே இங்கு பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய, சர்வதேச சந்தை தேவைகளுக்கு ஏற்றவாறு உற்பத்தியின் தரத்தை நிர்ணயித்தல், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், இந்தத் திட்டத்திற்காக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் ‘பிரஜா சக்தி’ சபைகளை சமமாக பங்களிக்கச் செய்து, முறையான கண்காணிப்பு பொறிமுறையின் கீழ் தேசிய இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
புதிய திட்டத்தின் ஊடாக இளநீர் ஏற்றுமதி வருமானத்தை 11.8 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை நோக்கி கொண்டு செல்வது இதன் நோக்கமாகும்.

