களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு..!
வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் இன்று (13.02.2026) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், 2008 அக்டோபர் 23ஆம் திகதியன்று வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றின் போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த வழக்குத் தவணைகளின் போது வழக்கின் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், மேல் நீதிமன்ற நீதிபதியினால் நீதிமன்ற மண்டபத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டு, மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நிற்குமாறு பணிக்கப்பட்ட பின்னரே இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

