சிறீதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி பறிப்பு?
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று (25) பிற்பகல் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில், அப்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்தார். அந்தக் கூட்டத்திலேயே தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.”
அதிகாரம்: “அதேபோன்று பாராளுமன்றக் கொறடா பதவியை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கும், பாராளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக இரா. சாணக்கியனையும் நியமிக்கத் தீர்மானித்தோம். பாராளுமன்றக் குழுவின் தலைவராக எஸ். சிறீதரனை நியமித்தோம். ஒரு குழு நியமித்த பதவியை மாற்றுவதற்கான அதிகாரம் அக்குழுவிற்கே உண்டு.”
“அரசியல் குழு அவர் மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக இப்பத்வியை வழங்கியது. ஆனால், அவர் அரசியலமைப்புச் சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அரசியல் குழு இரண்டு தடவைகள் ஆலோசனை வழங்கியிருந்தது. நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்திலும் சுமார் 4 மணித்தியாலங்கள் இது குறித்து வலியுறுத்தியும் அவர் செவிமடுக்கவில்லை.”
“கட்சியின் எந்த உயர் சபை அவருக்குப் பதவியை வழங்கியதோ, அந்தச் சபையின் ஆலோசனையை அவர் நிராகரித்தால், அப்பதவியை அவரிடமிருந்து மீளப் பெறத் தீர்மானித்துள்ளோம்.” என்றார்.
எவ்வாறாயினும், இது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் வினவியபோது, “அவ்வாறு சிறீதரனைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான எந்தவொரு இறுதித் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

