கணக்கறிக்கை தூக்கி எறியப்பட்டதால் பரபரப்பு..!
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.
சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் கணக்கறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அவ்வாறு சபை ஆரம்பத்தின் போது கணக்கறிக்கையை வழங்குவதால் அதில் உள்ள பிழைகளை உடனே கண்டுபிடிப்பது கடினம் என்றும், அந்த கணக்கறிக்கையை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னைய நாட்களில் வழங்க வேண்டும் என்றும் பிரதேச சபை உறுப்பினர் நா.பகீரதன் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட தவிசாளர் ஜெசீதன், கணக்கறிக்கையில் தவறு உள்ளது என்றால், அந்த அறிக்கை சபையில் முன்மொழிந்து, வழிமொழிய முன்னர் அதனை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் எனக் கூறினார்.
அந்தநேரத்தில் தவிசாளருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
இதன்போது குறித்த உறுப்பினர் தனது கையில் இருந்த கணக்கறிக்கையை தூக்கி சபையில் வீசி எறிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

