அனுமதிபத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது!

நாவலப்பிட்டி – ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்கள் மற்றும் வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (06.10.2022) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு
நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றிய 12 ரக துப்பாக்கி ஒன்றும், வெற்றுத்தோட்டாக்களும், மானின் தோலும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் இன்று (07.10.2022) முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor