யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதிகளில் அநாகரிகச் செயற்பாடு; மணிவண்ணன் எச்சரிக்கை

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதிகளில் அநாகரிகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் திடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியை பார்வையிட்ட மாநகர சபை முதல்வர், அங்கு இடம்பெற்றுவரும் அநாகரிகச் செயற்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் நேரடியாக அதனை அவதானித்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே முதல்வர் வி.மணிவண்ணன் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். கோட்டைப் பகுதிகளில் அநாகரிகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் இனங்காணப்பட்டால், அவர்களைக் கடுமையாக எச்சரித்து பொலிஸார் ஊடாக பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதி சமூகச் சீரழிவு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை மையமாக மாறிவருகின்றது. கோட்டைப் பகுதியை சுற்றியுள்ள பற்றைக் காடுகளை அகற்றுமாறு நீதிபதிகள் யாழ். மாநகர சபையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆகவே கோட்டைப் பகுதியை சுற்றியுள்ள பற்றைக்காடுகளை உடனடியாக அகற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதி தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருப்பதால் தொல்லியல் திணைக்களத்தினருடன் பேசி இதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அவர்களும் இதற்கு சம்மதத்தினை தெரிவித்துள்ளனர் – என்றார்.

Recommended For You

About the Author: webeditor