ஆகஸ்ட் 2025 இல் 1.98 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது இலங்கை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கூற்றுப்படி, ஆகஸ்ட் 2025 இல் இலங்கை 198,235 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 20.4 சதவீதம் அதிகரிப்பாகும்.
மொத்த வருகையில் 23.4 சதவீத பங்களிப்புடன் 46,473 சுற்றுலாப் பயணிகளுடன் இந்தியா தொடர்ந்து மிகப்பெரிய சுற்றுலா மூல நாடாக இருந்துள்ளது.
இங்கிலாந்து 19,764 சுற்றுலாப் பயணிகளுடன் (10 சதவீதம்) இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து ஜேர்மனி (12,500), சீனா (12,294) மற்றும் இத்தாலி (12,247) ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.
மற்ற முக்கிய பங்களிப்பாளர்களில் பிரான்ஸ் (10,495), ஸ்பெயின் (8,843), அவுஸ்திரேலியா (7,833), நெதர்லாந்து (6,082) மற்றும் ஜப்பான் (5,127) ஆகியவை அடங்கும். இந்த முதல் பத்து நாடுகளின் மொத்த வருகை ஆகஸ்ட் மாதத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
ஜனவரி முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலப்பகுதியில், இலங்கை மொத்தம் 1,566,523 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. இந்த எட்டு மாதங்களில் 325,595 வருகையுடன் இந்தியா முதலிடத்திலும், இங்கிலாந்து (151,141) மற்றும் ரஷ்யா (118,916) ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
உலகளாவிய பொருளாதார மற்றும் பயண சவால்கள் இருந்தபோதிலும், ஆகஸ்ட் 2018 மற்றும் 2024 இல் வருகைகள் முறையே 200,359 மற்றும் 164,609 ஆக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு முழுவதும் வருடாந்திர வளர்ச்சி சீராக இருப்பதாக சுற்றுலா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது சுற்றுலாத் துறையின் வலுவான மீட்புப் பாதையை எடுத்துக்காட்டுகிறது.


