மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவு..!
உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் ஆதரவாக 09 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் அவர்களுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
உப தவிசாளர் தெரிவிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.இதன் போது 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.
இதன் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் அவர்களுக்கு 15 வாக்குகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீனுக்கு 07 வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில் மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டார்.


