பொத்துவில் – அறுகம்பே பகுதியில் வீதித்தடைகள், சோதனைகள்!

பொத்துவில் – அறுகம்பே பகுதியில் வீதித்தடைகள், சோதனைகள்! ( பிந்திய நிலைவரத் தகவல்கள்)

அம்பாறை மாவட்டம் பொத்துவில் அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் எனவும் அங்கு செல்வதை தவிர்க்குமாறும் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்நாட்டு தூதரகம் கடும் அறிவுறுத்தல் விடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

பயண ஆலோசனையை வெளியிட்டு, அமெரிக்க தூதரகம் சந்தேகப்படும்படியான எதையும் கண்டால் 119 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு தெரிவித்துள்ளது.

இன்று (24) அதிகாலை அப்பகுதிக்கு விரைந்த முப்படையினர் உள்ளிட்ட பொலிஸார் சுற்றுலா முக்கியத்துவ இடங்கள் சந்தேகத்துக்கிடமான வாகனங்களை இடைமறித்து சோதனை செய்வதுடன் தற்காலிக வீதி தடைகளையும் ஏற்படுத்தி அப்பகுதியால் செல்லும் வாகனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு (Surfing) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் அல்லது வேறு எந்த பிரதேசத்திலும் இவ்வாறான நிலைமை தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொத்துவில் பிரதேசத்துக்கு வருகை தரும் இஸ்ரேலியப் பிரஜைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடைபெற இருந்ததாக மேலும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, அறுகம்பை பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக இலங்கை பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய செயற்படுமாறு தங்களது நாட்டு பிரஜைகளுக்கு ரஷ்ய தூதரகமும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin