வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளதாவது,

செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 28,344 பேர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். அதற்கிணங்க வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 10 வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செம்டெம்பர் மாதம் 25,716 பேர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டின் கடந்த 09 மாதங்களில் 240,000க்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் 99,939 பெண்களும் 142,170 ஆண்களும் உள்ளடங்குவர்.

அதன்படி, 2024ஆம் ஆண்டில் இதுவரை முழுமையான திறமை கொண்டவர்கள் 70,396 பேரும், பகுதியளவில் திறமை கொண்டவர்கள் 3,704 பேரும் வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர்.

இவர்களில் அதிகளவானோர் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கடந்த 9 மாதங்களில் 6,391 பேர் இஸ்ரேலுக்கும், 6,295 ஜப்பானுக்கும், 5,870 பேர் தென் கொரியாவுக்கும் சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin