தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளார்

தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவருமான பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”எமது பொது வேட்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதனால் சுயேட்சையாக போட்டியிட முடியும்.

அதனால் அவர் சுயேட்சையாகவே போட்டியிடுகிறார்.

தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட கூடிய 75 தொடக்கம் 80 பேர் வரையிலானவர்களின் பெயர்களை பரிசீலித்தே , பா.அரியநேந்திரனை தெரிவு செய்துள்ளோம்.

இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த பலரும் எமக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கட்சியின் முடிவு ஓரிரு நாட்களில் வெளிவரும் என நம்புகிறோம். நாம் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறோம்.

எம்முடன் இணைந்து பயணிக்க விரும்புவோர் பயணிக்க முடியும். இன்னமும் ஓரிரு நாட்களில் வேட்பாளருக்கான கட்டுப்பணத்தினை செலுத்தவுள்ளோம்” என தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டார்.

Recommended For You

About the Author: admin