இஸ்ரேல், உக்ரேன் விவகாரம் குறித்து பேசும் பைடன், மக்ரோன்: ஸெலென்ஸ்கியிடம் வருத்தமும் தெரிவிப்பு

பிரான்சில் ‘டி-டே’ நிகழ்வின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொள்ளுமாறு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் மக்ரோனின் அழைப்பை ஏற்று பைடன் பாரிஸ் சென்றுள்ளார். இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இஸ்ரேல் – காஸா போர், ர‌ஷ்யா – உக்ரேன் நிலவரம் குறித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு போர் கப்பல் செய்து தர அமெரிக்கா ஒப்பந்தம் செய்தது. இதனால் பிரான்ஸ் கடும் அதிருப்தி அடைந்தது.

அமெரிக்காவின் நடவடிக்கையால் பிரான்சுக்கு பல பில்லியன் டொலர் ஒப்பந்தம் கைவிட்டுப்போனது. இருப்பினும் அமெரிக்கா-பிரான்ஸ் உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை.

இருநாட்டு ஜனாதிபதிகளும் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றர். 2022ஆம் ஆண்டு பைடனின் அழைப்பை ஏற்று மக்ரோன் வெள்ளை மாளிகைக்கு சென்றிருந்தார்.

“பிரான்ஸ் மிகவும் நெருக்கமான மற்றும் பல கால ஆண்டு நட்பு நாடு. இருநாட்டின் ஒற்றுமையை உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியமானது. எதிர்காலத்தில் மேலும் ஒற்றுமையாக இருந்து சாதிப்போம்,” என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இவ்வாரம் தெரிவித்திருந்தார்.

இரு தலைவர்களும் இந்தோ- பசிபிக் வட்டாரத்தின் ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், விநியோகச் சங்கிலி போன்றவற்றின் கொள்கை ரீதியான சவால்கள், கடல்சார் சட்ட அமலாக்கம் குறித்தும் பேசுவார்கள் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஜூன் 7ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை பாரிசில் சந்தித்தார்.

ர‌ஷ்யாவுக்கு எதிரான போருக்கு உதவி நிதி தருவதில் ஏற்பட்ட காலதாமதம் குறித்து பைடன் வருத்தம் தெரிவித்தார். அன்று ஸெலென்ஸ்கி பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் போர் நிலவரம் குறித்தும் நட்பு நாடுகளின் உதவி குறித்தும் பேசினார்.

Recommended For You

About the Author: admin