கிலியன் எம்பாப்பே PSGஐ விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தினார்

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் பிரபல நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே Paris Saint-Germain (PSG) கழகத்தில் இருந்து வெளியேறுவதை உறுதிசெய்துள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக PSG கழகத்திற்காக விளையாடி வரும் எம்பாப்பே, இது தனது கடைசி சீசன் என்று அறிவித்துள்ளார். 25 வயதான அவர் சமூக ஊடக காணொளியில் தனது முடிவை அறிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை துலூஸில் இடம்பெறும் போட்டியே பார்க் டெஸ் பிரின்சஸில் தனது இறுதி ஆட்டம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

சமீப காலமாக எம்பாப்பே PSG கழகத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் தனது கனவு அணியான ரியல் மாட்ரிட்டில் அவர் இணைந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முடிவை அறிவித்துள்ள கிலியன் எம்பாப்பே அனைவருக்கும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் கூறியுள்ளார். எவ்வாறாயினும், PSG கழகம் எம்பாப்பேயின் ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பியதாகவே தகவல்கள் வெளியாகின.

கடந்த ஜனவரியில் தனது தற்போதைய ஒப்பந்தத்தில் எந்த நீட்டிப்புக்கும் கையெழுத்திடப் போவதில்லை என்று எம்பாப்பே கழகத்திடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் PSG கழகத்திற்காக எம்பாப்பே விளையாடி வருகின்றார்.

இந்தக் காலப்பகுதியில் மூன்று முறை பிரெஞ்சு கோப்பையையும், இரண்டு முறை பிரெஞ்சு லீக் கோப்பையையும், மூன்று முறை பிரெஞ்சு சூப்பர் கோப்பையையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin