மே தினக் கூட்டத்தில் ரணிலுக்கு பசில் கூறிய மறைமுக செய்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்தகாலங்களில் நாமல் ராஜபக்சவுக்கு இத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

வேட்பாளர் தொடர்பில் அக்கட்சி நாசுக்கான பதில்களையே அளித்து வருகிறது. இதுவரை கட்சியின் வேட்பாளர் யாரென அறிவிக்கவில்லை.

கட்சியின் அடுத்த தலைவராக நாமலை உருவாக்கும் முயற்சியின் ஒரு நகர்வாகவே இன்று அவருக்கு அளிக்கப்பட்டுள்ள வரவேற்பின் மூலம் மக்களுக்கு சொல்லப்பட்டுள்ள செய்தி.

மறுபுறம் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மறைமுக செய்தியொன்றையும் சொல்லி உள்ளார். பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ரணில் களமிறங்க வேண்டுமென்றால் அக்கட்சியின் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என்பதே அந்த செய்தி.

அதற்காகவே பொதுஜன பெரமுனவின் மே தின மேடையில் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்பிக்க பெரேரா பசில் ராஜபக்சவின் அருகில் அமரவைக்கப்பட்டுள்ளார்.

அக்கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இருக்கும் தருணத்தில் பசில் ராஜபக்சவின் பக்கத்தில் அமரவைக்கப்பட்டதன் ஊடாக ரணிலுக்கு பசில் மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தம்பிக்க பெரெராவும் இருப்பதாக பசில், ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட அக்கட்சியின் பல முக்கிய உறுப்பினர்கள் கடந்தகாலத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin