ரணில், சஜித் மற்றும் அநுர நேரடி விவாதத்திற்கு அழைப்பு

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் நிச்சயமாக களமிறங்குவார்கள் என்பது பகிரங்கமான உண்மை.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரச்சார நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான உறுதிமொழிகள் குறித்து கேட்டறிவதற்காக ரணில், சஜித் மற்றும் அநுரவிற்கு நேரடி விவாதத்திற்கு டெய்லி மிரர் செய்திச் சேவை அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நேர்காணல் டெய்லி மிரர், லங்காதீப, தமிழ் மிரர் மற்றும் சண்டே டைம்ஸ் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியல் தலைவர்கள் மூவரையும் விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு கோரும் முறையான அழைப்பிதழ் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விவாதம் நடத்துவதற்கான திகதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin