பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் இலங்கையர்கள்

மியான்மர் தாய்லாந்து எல்லைக்கு இடையில் பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ‘சைபர் கிரிமினல் ஏரியா” எனப்படும் 3 முகாம்களில் 56 இலங்கையர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.

அதனையடுத்து, இலங்கை அரசாங்கம் தலையீடு செய்து குறித்த 56 இலங்கையர்களில் 8 பேரை மியன்மர் பாதுகாப்பு தரப்பினர் ஊடாக மீட்டனர். எனினும் மீட்கப்பட்டவர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், தற்போது அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, மியான்மரில் உள்ள இணையவழி குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதில் அரசாங்கம் காலதாமதம் செய்து வருவதாக அங்கு சிக்கியுள்ள இலங்கை இளைஞர் ஒருவர் தகவல் வழங்கியதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொலைபேசி வசதிகள் எதுவும் இல்லை எனவும் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்து பணிக்கு அமர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, தங்களுக்கு மின்சாரத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் உரிய வகையில் உணவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் தகவல் வழங்கியுள்ளார்.

மேலும், பயங்கரவாத வலையமைப்பினால் நடத்தப்படும் குறித்த முகாம்களில், சிக்கியுள்ள இலங்கையர்கள் இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை, குறித்த முகாம்களில் இருந்த தங்களது நாட்டு பிரஜைகள் குழுவை உகாண்டா அரசாங்கம் தலையீடு செய்து மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin