மன்னார் சிறுமி கழுத்து நெரித்தே கொல்லப்பட்டார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்

தலைமன்னாரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சிறுமி நேற்று முன்தினம் (15) மாலை காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, தென்னந்தோட்டத்தில் இருந்து நேற்று (16) காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

சிறுமியின் தாயும் தந்தையும் புத்தளம் – பூக்குளம் கிராமத்தில் வசித்து வருவதுடன், பாடசாலை செல்வதற்காக சிறுமியும் அவரது இரு மூத்த சகோதரிகளும் சகோதரனுடன் ஊர்மனை கிராமத்திலுள்ள பாட்டியின் வீட்டில் வசித்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் உயிரிழந்த சிறுமி மூன்றாவது பிள்ளையாவார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவௌியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சில சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளன.

காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் ஈடுபட்டிருந்ததுடன், நேற்று காலை 6.15 அளவில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

சட்ட வைத்திய அதிகாரியும் மன்னார் மாவட்ட பதில் நீதவானும் சிறுமியின் சடலத்தை பார்வையிடச் சென்ற போது, சிறுமிக்கு நீதி கோரி பிரதேச மக்களால் கவனயீர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin