சிங்களத் தலைவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த சிறீதரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைய மீது நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விவாதம் இடம்பெற்று வருகிறது.

அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள பொருளாதார மறுசீரமைப்புகள், வரி திருத்தங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, தமது உரையில் விளக்கமளித்திருந்தார்.

நேற்றைய தினம் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை ஏற்படுவத்துவதையே அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினர்.

அதேபோன்று தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி தமது உரையில் எந்தவொரு வார்த்தையையும் குறிப்பிடவில்லை என தமிழரசுக் கட்சியின் சார்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

விவாதத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன்,

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை முன்மொழியவில்லை.

இலங்கைத் தீவில் கடந்த எட்டு தசாப்தங்களாக இனப்பிரச்சினை நிலவி வருகிறது. ஆனால், ஜனாதிபதி அதை பற்றி பேசாது நாட்டில் வெறும் பொருளாதார பிரச்சினை மாத்திரமே இருப்பது போன்று பேசியுள்ளமை தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

சமாதானத்தின் கதவுகள் மூடப்பட்டுள்ளன. இலங்கையின் தலைவர்கள் பலமுறை உலகத்தை ஏமாற்றியுள்ளனர். தமிழர்களுடன் கைச்சாத்திட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்தாமையே நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை நாட்டின் தலைவர்கள் உணரவில்லை.

நாட்டில் சமாதானம் பிறக்காது, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை கட்டியெழுப்பப்படாது பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.

சிறிமாவின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால் நாட்டில் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டது. 1977களின் பின்னர் ஐ.தே.கவின் அரசாங்கம் வந்தப்பின்னர் நாடு கடுமையான கடனில் முழ்கியது. அதன் பின்னர் கடனை எவ்வாறு வாங்குவது என்றே சிந்தித்தனர்.

சிறிமாவின் காலத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைத்துப் பகுதிகளில் இருந்து உற்பத்திகள் அதிகரித்தன.

ஆகவே, சிங்களத் தலைவர்கள் இதய சுத்தியுடன் செயல்பாடமையே பிரச்சினைகளுக்கு காரணம் என்பதை அவர்கள் உணரவில்லை.

யுத்த வெற்றியை மாறி மாறி வந்த அரசாங்கங்கள் கொண்டாடின. இராணுவத் தளபதிகளுக்கு விருதுகளை வழங்கி மக்களை ஒரு போரியல் மாயைக்குள் மடக்கி வைத்திருந்தீர்கள்.

அரகலய போராட்டம் வெடித்தப் பின்னர்தான் நாட்டு மக்கள் ஆட்சியாளர்களையும் நாட்டின் பொருளாதாரம் ஊசல் ஆடுவதையும் உணர்ந்துக்கொண்டனர்.‘‘ என்றார்.

இன்று உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

”இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியால் அனுபவிக்கும் துன்பங்களையும் எதிர்காலத்தில் அனுபவிக்க போகின்ற நன்மைகளையும் தமது கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாபங்களை நோக்கமாக கொண்டதாக ஜனாதிபதியின் உரை இருக்கவில்லை. மாறாக அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்ற வேண்டுமென்ற அழைப்பையே விடுத்துள்ளார்.

“நமக்கு நாமே விளக்குகள் ஆவோம்“ என்ற புத்த பெருமானின் போதனையில் ஆரம்பித்து மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை இணைத்து அவர் தமது கொள்கை விளக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.

புறநானூற்றில் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்ற வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்து வருபவன் நான். நான் என்பதை நாம் என மாற்றிவிட முடியுமானால் நாட்டில் உள்ள அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுவிட முடியும்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எவரும் செயல்பட்டால் அதன் ஊடாக நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்பட போவதில்லை.

நாம் இன்னமும் பொருளதார வீழ்ச்சியில் இருந்து மீண்டெழவில்லை. மீண்டெழும் போது, சில வலிகளையும் வேதனைகளையும் அனுபவிக்க நேரிடும். ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை விரைவான மீட்சிப்பாதைக்கு திரும்பும்.” என்றார்.

Recommended For You

About the Author: admin