வவுனியா மாவட்ட தலைவியை விடுதலை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிசாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் ஜனாதிபதி வருகையின் போது நியாயம் கேட்க சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (08) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு புனித இராஜப்பர் தேவாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணியானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சென்று குறித்த பேரணியானது நிறைவு பெற்றிருந்தது.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினையும் வெளிப்படுத்தி கோசங்களையும் எழுப்பி இருந்தனர்.

போராட்டத்தில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Recommended For You

About the Author: admin