“மார்பகப் புற்றுநோய்” என கூறி ரூ.53 லட்சம் மோசடி? யாழில் பரபரப்பு!
யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை மோசடி தொடர்பான குற்றச்சாட்டு ஒன்று வெளியாகியுள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் வசித்து வரும் 67 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், 34 வயதான திருமணமாகாத பெண் அரச உத்தியோகத்தரிடம் சுமார் 53 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த பெண், தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகவும், சிகிச்சைக்காக மாதந்தோறும் அதிகளவு செலவு தேவைப்படுவதாகவும் கூறி, மருத்துவ ஆவணங்களையும் அனுப்பி நிதியுதவி கோரியதாக முதியவர் தெரிவித்துள்ளார்.
அவரின் கோரிக்கையை நம்பிய முதியவர், தனது கனேடிய ஓய்வூதியப் பணத்திலிருந்து தவணை தவணையாக பணத்தை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பின்னர் யாழ்ப்பாணம் வந்த அவர், அந்தப் பெண்ணை நேரில் சந்திக்க முயன்றபோது தொடர்ந்து தவிர்க்கப்பட்டதாகவும், விசாரித்ததில் புற்றுநோய் குறித்த தகவல் உண்மையல்ல எனத் தெரியவந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், தன்னிடம் உள்ள பணப் பரிமாற்ற ஆதாரங்களுடன், நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் கீழ் பொலிஸில் முறைப்பாடு செய்ய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை இன்னும் நடைபெறவுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான தரப்பின் பதில் இதுவரை வெளியாகவில்லை

