மக்களையும் தன்னையும் பாதுகாப்பதே நல்ல தலைமை: டக்ளஸ் தேவானந்தா

மக்களையும் பாதுகாத்து தன்னையும் பாதுகாப்பதே நல்ல தலைமை. அதனையே நான் செய்கிறேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புதிய பேருந்து நிலையத்தில் 28 கடைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு உள்ளது. நானும் ஆயுத போராட்டத்தில் இருந்த தலைவர் என்ற வகையில் எனக்கு அந்த பொறுப்பு உள்ளது.

கிளிநொச்சியில் உள்ள சுற்றுலா விடுதியில் நான் தங்கும் போது, எதிரே நீத்துப் பெட்டி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவரிடம் கொள்வனவு செய்ய எம்மவர்கள் சிலர் சென்றிருந்தனர்.

அப்போது, இந்திய இராணுவத்துடன் இணைந்து நான் பல கொடுமைகளை செய்ததாக கூறியிருந்தார். அவருக்கு மட்டுமல்ல பலருக்கு என் தொடர்பில் தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது.

இந்திய படை காலகட்டத்தில் நான் இங்கு இருக்கவில்லை. 86 ம் ஆண்டு மே மாதம் இந்தியாவிற்கு சென்று 90ம் ஆண்டு மே மாதம் திரும்பி வந்தேன். இந்திய படை திரும்பி போகும் காலகட்டம் அது.

இந்த மக்கள் படும் கஸ்டத்திற்கு நானும் ஏதோவொரு காரணம். ஏனென்றால், ஆயுத போராட்டத்தில் ஆரம்ப போராளிகளில் நானும் ஒருவர். தலைமை என்றால் மக்களையும் பாதுகாக்க வேண்டும், தன்னையும் பாதுகாக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமான தலைமையாக இருக்க முடியும்.

மக்களையும், தன்னையும் பாதுகாக்க முடியாத ஒருவரை தலைவராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன்.

பிரதேச சபையில் இருந்தவர்கள் தமது வருமானத்தை மாத்திரமே இலக்காக கொண்டிருந்தனர். மக்கள் நலன் சார்ந்து செயற்பட்டிருக்கவில்லை. அதனால்தான் இந்த நிலை உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக மக்கள் பயன்படுத்த வேண்டும். சுற்றாடலை முறையாக பாதுகாக்க வேண்டும். மரங்களை வெட்டக் கூடாது. பிரதேச சபைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin