வெள்ளத்தில் முழுமையாக மூழ்கிய முல்லைத்தீவு: தத்தளிக்கும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவில் 1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே தாழ் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்புடுகின்றனர்.

முத்துயன்கட்டு ,பேராறு , முத்துவினாயகபுரம், பண்டாரவன்னி வசந்தபுரம் மன்னாகண்டல், பூதன்வயல், கணுக்கேணி கிழக்கு, மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வீதிகளை வெள்ளநீர் ஊடறுத்து செல்வதால் வீதிகளில் பயணிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மன்னாகண்டல் பகுதி மாந்தை கிழக்கு பிரதேசம், சிறாட்டிகுளம் மற்றும் துணுக்காய் ஆலங்குளம் கொக்காவில் வீதியில் மருதங்குளம் ஐயன்கன்குளம் வான் பாய்வதால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலம் சேதமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதிகளில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதால் படகு போக்குவரத்தினை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin