மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுங்கள்

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுங்கள் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பேட்டோரினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமலாக்கப்பட்ட உறவுகள் 2500 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வீதிகளில் நின்று தம் உறவுகளுக்காக போராடி கொண்டிருக்கின்றார்கள். ஆனால், முடிவுகள் எதுவுமில்லை.

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். மனித உரிமை ஆணைக்குழு சம்பந்தமாக அல்லது ஐ.நா சம்பந்தமாகவோ எமக்கு எந்த தீர்வும் தரவில்லை.

எங்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. மதங்கள் அழிக்கப்படுகின்றன. கடலில் மீன்பிடிக்க முடியவில்லை. வயலில் பயிர்கள் , விவசாயம், தோட்ட செய்கைகள் செய்ய முடியவில்லை. காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி கிடைக்கவில்லை.சிறையிலிருப்பவர்களை விடுவிக்கவில்லை. இவ்வாறு இலங்கை அரசாங்கம் செய்யும் போது அதனை பொறுத்து வேடிக்கை பார்ப்பதுதான் ஐ.நாவின், மனித உரிமை ஆணைக்குழுவின் வேலை என்றால் அவர்களுக்கு ஏன் இந்த சர்வதேச தினம்?

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் முதல் இலங்கையில் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வினை கூறுங்கள். அந்த முடிவில்லாமல் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பது பிழை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.” என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin