ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை இதை மறக்காதீங்க!

நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில், அம்மன் எழுந்தருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர நவராத்திரி சிறப்பாக கொலு அமைத்தும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

#நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும் வீட்டில் படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி பூஜையின் முப்பெரும் தேவிகளை கும்பிடும் போது வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் பெற்றிட முடியும். உடல் வலிமையை வெளிப்படுத்தும் சக்தியாக துர்கா தேவியையும், வாழ்க்கைக்கு தேவையான செல்வ வளத்தை நல்க கூடியவராக ஸ்ரீமகாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரக் கூடிய கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரிய தினங்களாகும். இந்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு பத்தாவது நாள் மூன்று தேவியரும் பராசக்தியாக எழுந்தருளி மகிஷாசுர அசுரனை வதம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. இதனையே விஜயதசமியாக நாம் கொண்டாடி வருகிறோம்.

ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் அன்றைய தினம் துவங்கினால் அந்த வருடம் முழுவதும் அவர்களின் தொழில் சிறப்புடன் நடந்து செல்வ வளமும் பெருகும் என்பது ஐதீகம். அவ்வாறு தொழில் செய்யும் இடங்களில் உள்ள பொருட்களுக்கு அன்றைய தினம் பூஜை செய்ய வேண்டும்.

ஆயுத பூஜை கொண்டாடும் முறை

முதலில் அந்த பொருட்களை தண்ணீரில் கழுவிக் கொண்டு அவற்றுக்கு பால் மற்றும் தண்ணீர் சேர்த்து அபிஷேகம் செய்து அதன் பிறகு சந்தனம் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பின்னர் நாம் தொழில் செய்யும் இடத்தை சுத்தம் செய்து அலங்காரம் செய்து வாழை இலைபோட்டு படையலிட்டு ஆயுதங்களை அவ்விடத்தில் வைத்து தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

பூஜை செய்ய ஏற்ற தேதி, நேரம்

இந்த ஆண்டு (2024) சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகியன அக்டோபர் 23 ம் தேதி திங்கட்கிழமையும், விஜயதசமி விழா அக்டோபர் 24 ம் தேதி செவ்வாய்கிழமையும் கொண்டாடப்பட உள்ளது.

ஆயுதங்களுக்கு பூஜை செய்வதற்குரிய முகூர்த்த நேரமாக அக்டோபர் 23 ம் தேதி பகல் 02.18 முதல் 03.04 வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. தசரா எனப்படும் விஜயதசமி பூஜை செய்வதற்கான நல்ல நேரமாக அக்டோபர் 24 ம் தேதி மாலை 05.22 முதல் 06.59 வரையிலான நேரம் கணிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin