தாயை காப்பாற்ற சென்று உயிரை விட்ட மகள்

தாயின் இரண்டாவது கணவரிடம் இருந்து தாயை காபாற்றிவிட்டு 21 வயது மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் 21 வயதான ஏஞ்சலினா டிரான் எனும் யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

21 வயதான ஏஞ்சலினா டிரான், தனது தாயுடனும் தாயின் இரண்டாம் கணவர் கியெப் கெய்ன் சவ் ஆகியோருடன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பீகான் ஹில் பகுதியில் வசித்து வந்தார்.

தாய்மீது தாக்குதல்; தடுக்கச்சென்ற மகள்
கியெப், கடந்த வருடம் வரை வியட்னாமில் வாழ்ந்து, சென்ற வருடம்தான் அமெரிக்காவிற்கு வந்திருந்தார். தாய்க்கும், மாற்றாந்தந்தைக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கம்.

இரண்டாம் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற அவரது தாய் முயற்சித்ததால் பொருளிழப்பு ஏற்படும் என அஞ்சிய இரண்டாவது கணவர் சமீபத்தில், ஒரு நாள் இரவு டிரானின் தாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றியதில் கியெப், டிரானின் தாயின் முகத்திலும் தலையிலும் சுமார் 15 முறை கைகளாலேயே குத்தினார். து தனது படுக்கையறையில் உறங்கி கொண்டிருந்த டிரான், சத்தம் கேட்டு எழுந்து வந்து, உடனடியாக தாயாரை காக்க முயன்றார்.

இதையடுத்து கியெப்பின் கோபம் டிரான் மீது திரும்பியது. இதனால் கியெப் ஒரு பெரிய கத்தியை எடுத்து டிரான் நெஞ்சில் சரமாரியாக பல முறை குத்தினார். டிரான் மீது 107 கத்திக்குத்துகள் விழுந்தன.

அவசர உதவி எண்ணை அழைத்த தாய்
கத்தி குத்துக்கு ஆளான டிரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே டிரானின் தாய், தான் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து அமெரிக்காவின் அவசர உதவி எண்ணை அழைத்ததை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர்.

கத்தியுடன் நின்றிருந்த கியெப் காவலர்களின் மிரட்டலுக்கு அஞ்சி கத்தியை கீழே போட்டதும் அவரை உடனடியாக கைது செய்தனர். டிரானின் தாயாரையும் கொல்ல வீடு முழுவதும் அவரை தேடி வந்த கியெப்பின் நோக்கம், காவல்துறையினரின் வருகையால் தடைபட்டு, டிரான் தாயாரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

நன்றாக படிக்க கூடியவரான ஏஞ்சலினா டிரான் ஒரு சமூக பொறுப்புள்ள மாணவி என்றும், பிறருக்கு உதவிகள் செய்யும் நல்லெண்ணம் கொண்டவர் என்றும் கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor