இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பணிநீக்கம்பெற்ற சுகாதாரத் தொழிலாளர்கள்

விதுர்ஷா (Kamaleswaran Vithursha)
பேராதனைப் பல்கலைக்கழகம்


இலங்கையின் சமகாலப் பொருளாதார நெருக்கடியானது அனைத்துத் துறைகளையும் பாதித்து வருகின்றது. ஈஸ்டர் தாக்குதல், கொவிட்-19 தொற்று, அரசியல், பொருளாதார நிலைத்த தன்மையின்மை, அரகலய மக்கள் போராட்டம் போன்றவற்றை அடுத்து தோற்றம் பெற்றுள்ள சமூக அதிர்வுகள் குறித்த பொருளாதார நெருக்கடியினை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்தவண்ணமுள்ளன.

இதனால் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்புரிந்த தொழிலாளர்களை ஒப்பந்தம் முடிவடைந்த காலப்பகுதியில் ஒப்பந்த மீள்நீடிப்பின்றி பணிநீக்கம் செய்கின்ற போக்கு அதிகரித்துவருகின்றது.

அதிலும் குறிப்பாக நாள் ஊதிய அடிப்படையில் தற்காலிகமாக பணிக்கமர்த்தப்பட்டவர்கள் முறையான முன்னறிவிப்பின்றி அவர்களது பணிகளில் இருந்து பணிநீக்கப்படுகின்றமை ஒரு முக்கிய பிரச்சினையாக இனம்காணப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்த முடியாத பொருளாதார நெருக்கடி காரணமாக பல்கலைக்கழகங்கள் தமது தொழிலாளர்களுக்கான ஊதியத்தினை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.

இதன் காரணமாக பல்கலைக்கழகங்கள் பணியாளர் குறைப்பு நடவடிக்கைகளில்
ஈடுபட்டுவருகின்றன. இது கல்விசார் மற்றும் கல்விசாரா தற்காலிக ஊழியர்களைப்
பெரிதும் பாதித்துவருகின்றது. அத்துடன் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள
சூழ்நிலையில் ஊதிய உயர்வு வழங்கப்படாமையால்> பல்கலைக்கழகங்களில் தம்
ஊழியர்களைப் பணிக்கமர்த்தியிருந்த தனியார் நிறுவனங்களும் தொடர்ச்சியாக
பல்கலைக்கழகங்களோடு உடன்படிக்கைக்குச் செல்வதில் தயக்கம் காட்டிவருகின்றன.

இந்நிலையானது பல்கலைக்கழகங்களில் தனியார் நிறுவனங்களின் கீழ் ஒப்பந்த
அடிப்படையில் பணிக்கமர்த்தப்பட்ட நாள் ஊதியடிப்படையிலான ஊழியர்களது
தொழில்சார்பாதுகாப்பின்மையை அதிகரித்துள்ளது.

சமகாலப் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இவ் வருடத்தில் மாத்திரம் சுகாதாரத் தொழிலாளர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள், மரம் செடி கத்தரிப்பவர்கள், பாதுகாப்புத் துறையினர், காவலாளர்கள் உள்ளடங்கலாக நடப்பு ஊழியர்களில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து சதவீதமான ஊழியர்கள்
வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் தொழிலாளர்கள் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகங்கள் தமக்கான சுகாதாரத் தொழிலாளர்களை நாள் ஊதிய ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் கோருகின்றன.

அதனடிப்படையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொதுச் சேவைகள் பிரிவின்
கீழ் சுத்தம் மற்றும் சுகாதாரத்தினைப் பேணுவதற்காக பல்கலைக்கழகத்தினது
கொள்முதல் காரியாலயத்தினால் சுகாதாரத் தொழிலாளர்கள் சுகாதாரத்
தொழிலாளர்களது எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் தீர்மானிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழத்தினது இடஒதுக்கீட்டு கோரிக்கையின் அடிப்படையில் ஒருவருடகால ஒப்பந்தத்துடன் சுகாதாரத் தொழிலாளர்களினை வழங்குகின்றனர். குறித்த தொழிலாளர்கள் பல்கலைக்கழ சுகாதார நிலைய நிர்வாகத்தின் கீழ் பணிக்கமர்த்தப்படுகின்றனர். இவ் எண்ணிக்கையானது ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக தேவை மற்றும் ஏனைய காரணங்களை அடிப்படையாகக்கொண்டு மாற்றியமைக்கப்படுகின்றது.

இவர்களது பிரதான கடமைகளாக லொறி மற்றும் டிராக்டர் மூலம் குப்பைகளைச்
சேகரித்தல் குப்பைகளைத் தரப்படுத்தல் பல்கலைக்கழக பொது இடங்களின்
வளாகங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளல் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பிரதான வடிகால் அமைப்பைச் சுத்தம் செய்தல்> கழிவு மேலாண்மை நிலையத்திற்குச் கொண்டு செல்லப்படும் கலப்புக் கழிவுகளை பிரித்தெடுத்தல்> பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளில் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியன பல்கலைக்கழக சுகாதார நிலையத்தால் வரையறுக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழக சுகாதார நிலையம் குறித்த பல்கலைக்கழ சுகாதார
தொழிலாளர்களுக்குப் பொறுப்பாக உள்ளது. குறித்த அலகிடம் இருந்து பெறப்பட்ட
தரவின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பேராதனைப்
பல்கலைக்கழத்தில் ஆறு சுகாதாரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை
குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று 97 சுகாதாரத் தொழிலாளர்கள்
மாத்திரமே பணிபுரிகின்றனர்.

இது தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழக பொதுச்சேவைகள் பிரிவின் உதவி முகாமையாளர் எஸ்.பி.எம்.வலன்ஸ அவர்களிடம் வினவியபோது 2021 ஆம் ஆண்டு 101 சுகாதாரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஆறு ஊழியர்கள் அவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த காலத்தில் மீள ஒப்பந்தம் நீடிக்கப்படாது பணியிலிருந்து நிறுத்தப்பட்டனர். இவர்கள் தொடர்பான அலுவல்கள் பல்கலைக்கழ சுகாதார நிலையத்தின் கீழ் வருகின்றது.

அத்துடன் இவர்கள் தொடர்பான தனிப்பட்ட விடயங்கள் எமக்கு தெரியாது. தனியார் நிறுவனங்களே அவர்களது தரவுகளைப் பேணுகின்றன. அத்துடன் தனியார் நிறுவனங்களோடு மாத்திரமே பல்கலைக்கழகத்தின் ஒப்பந்தம் இடம்பெறும். இதுபோல வேறும் சில ஊழியர்கள் அவர்களது ஒப்பந்த காலம் முவடைந்த நிலையில் நீக்கப்பட்டுள்னர். அவர்களது பணிநீக்கம் தொடர்பாக அவர்களது நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இவர்கள் அரசாங்க கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக பொதுச் சேவைகள் பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவல் மூலம் உறுதிப்படுத்த முடிகின்றது.

அந்தவகையில் வருடத்திற்கு ஒருமுறை மீளமைக்கப்படும் ஒப்பந்த அடிப்படையில் மூன்று வருட காலத்திற்கும் அதிகமாகப் பணிபுரிந்து வந்த ஆறு ஊழியர்கள் அவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த காலத்தில் குறித்த ஒப்பந்தம் மீள நீடிக்கப்படாது பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தம் வேலை நிறுத்தம் தொடர்பாக எந்த ஒரு தரப்பினாலும் முறையாக அறிவுறுத்தப்படவில்லை. ஒரு குறித்த நாளில் தம் மேற்பார்வையாளரால் அழைக்கப்பட்டு மிகச் சாதாரணமாக நாளையில் இருந்து உங்களுக்கு வேலை இல்ல நீங்கள் வேலைக்கு வரவேண்டாம் என
அறிவுறுத்தப்படுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தம் பணிநீக்கத்திற்கான காரணத்தினை அறிந்துகொள்வதற்காக தம் மேற்பார்வையாளர் மற்றும் தனியார் நிறுவனங்களைத் தொடர்புகொண்டு கேட்டபோதும் தெளிவற்ற பதில்களே கிடைத்துள்ளது. இந்நடவடிக்கையானது தொழிலாளர் ஒருவர் தான் பணிநீக்கம் பெற்றதற்கான காரணத்தினை அறிந்துகொள்வதற்கு உள்ள உரிமையை மறுப்பதாக உள்ளது.

நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவரது ஒப்பந்தகாலம் முடிவடையும் காலப்பகுதியில் ஒப்பந்த நீடிப்பு, பணிநீக்கம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக குறித்த நிறுவனம் குறித்த தொழிலாளருக்கு அறிவுறுத்த வேண்டும் எனும் அடிப்படை உரிமை அவர்களில் பெரும்பானவர்களுக்கு தெரிந்திருந்த போதும் நடைமுறையில் அவ் உரிமையை பெறுவதற்கு இயலுமையற்றவர்களாகவே உள்ளனர்.

இத் தொழிலாளர்கள் வேறுபட்ட தனியார் நிறுவனங்களின் கீழ் தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தமையாலும் அவர்கள் அடிக்கடி இடமாற்றங்களைப் பெற்றதாலும் பெரும்பாலானவர்கள் தமது சக ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்க முடியவில்லை.

இதனால் ஒரு ஊழியர் பணிநீக்கம்பெற்ற போதும் அது தொடர்பாக ஏனைய ஊழியர்கள் அறிந்திருக்கவில்லை. அத்துடன் வேலையில் இருந்து இடைவிலக்கப்பட்ட திகதிகள் ஆளுக்காள் வேறுபட்டிருந்தமையால் யாரை எப்போது பணியில் இருந்து நீக்கினார்கள் என்பதனை அவர்கள் அறிந்திருக்கவில்லை. தற்போது
சுகாதாரத் தொழிலாளர்களாகப் பணிபுரிவோரிடத்திலும் வேலையின் நிச்சயமின்மைகள் தொடர்பான அச்சம் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தற்காலிகத் தொழிலாளர்களான இவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பின்நிற்கின்றனர். அத்துடன்பணிநீக்கம் பெற்றவர்கள் பெரும்பாலும்பேராதனையை அண்மித்துள்ள பெனிதெனியா மஹாஹந்த உடபேராதெனிய கம்பொல பகுதியில் வாழும் ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்ட சமூகத்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

இவர்கள் சாதி ரீதியாக ஒடுக்குமுறைக்கு உட்பட்டவர்களாகவோ, பெண்
தலைமைக்குடும்பங்களாகவோ, வயதானவர்களாகவோ அல்லது தனித்து
வாழ்வோர்களாகவோ இருக்கின்றனர். இதனால் இவர்கள் சமூகத்தில் தம்
உரிமைகளுக்காக தனித்தோ குழுவாக இணைந்தோ குரலெழுப்ப முடியாத நிலையே
காணப்படுகின்றது.

குறித்த சுகாதாரத் தொழிலாளர்கள் முறையான முன்னறிப்பின்றி பணியில் இருந்து
நீக்கப்படுகின்றமையானது> அண்மைக்காலத்தில் அதிகரித்துவருகின்ற பொருளாதார நெருக்கடிகளுடன் அவர்களது வாழ்க்கை முறையில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.

அத்துடன் நிறுவனங்களில் இடம்பெறுகின்ற திடீர் தொழிலாளர்கள் குறைப்பானது>
நடப்பு நிலையில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு> மூன்று மடங்கு வேலையை
அதிகரிக்கவும் செய்கின்றது.

வேலையில் பணிநீக்கம் பெற்ற சுகாதாரத் தொழிலாளி இந்திராணி (கம்பொல)
எனக்கு நான் பணிநீக்கப்படுவது குறித்து எவையும் தெரியாது. நான் இவ்வாறு திடீரென பணிநீக்கம் செய்யப்படுவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. என் இரண்டு பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வதற்கு நான் நம்பியிருந்தது அந்த தொழிலை தான்.

மூத்தவள் ஓ.எல் எடுத்திட்டு வீட்டில தான் இருக்கின்றார். தம்பி சின்னவர். அய்யா
(கணவன்) எங்களோட இல்லை. தனியா தான் மாமியோடு வாழ்கின்றோம். அடுத்த
வேளை சாப்பாடு என்ன என்பது தொடர்பாகச் சிந்திப்பதற்கு பயமாக உள்ளது. நான்
தற்போது நாள் கூலி வேலைகளுக்குப் போறனான் ஆனாலும் ஊதியம் போதாது
(சிங்களத்தில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

இந்திராணி என்பவர் 47 வயதான பெண். தனது இரண்டு பிள்ளைகளுடன் கம்பொல
பகுதியில் வசித்துவருகின்றார். இவர் ஆரம்பத்தில் வீட்டுப்பணிப் பெண்ணாக
பணிபுரிந்துவந்தார். கடந்த மூன்று வருடங்களாக பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் ஒரு சுகாதாரத் தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பேராதனைப்
பல்கலைக்கழத்தின் பெண்கள் விடுதியில் பணிபுரிந்துவந்தார்.

தினமும் தனது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்து பின்னர் தன் பஸ்ஸினைப் பெற்றுக்கொண்டே வேலைக்குச் சென்றுவந்துள்ளார். பெண்தலைமைக்குடும்பமான இவரது குடும்பம் இந்திராணியின் வருமானத்தினை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு இயங்கியது.

கடந்த மார்ச் மாதம் 19 ம் திகதி அவர் பணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் இவரது குடும்பம் பொருளாதார ரீதியான சவால்களை
எதிர்கொண்டுவருகின்றது. குறித்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ள போதும் அவருக்கு எந்வொரு ஒப்பந்தக்கடிதமும் வழங்கப்படவில்லை. தனித்து சம்பளம் பெறும்போது ETF
Card இல் மட்டுமே தனது கையொப்பத்தினை இட்டு பணிபுரிந்து வந்துள்ளார். அவரது
ஒரு நாள் ஊதியம் 700 ரூ தொடக்கம் 750 ரூ வரையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவ்
ஊதியம் அவரது வேலை நேரத்தினைப் பொறுத்து மாற்றியமைக்கப்படும். கொவிட்-19
தொற்று காரணமாக வேலை நேரமும் குறைவாகவே காணப்பட்டது.

நடப்பு வருடம் தை மாதம் வரை குறித்த ஒரு பெண்கள் விடுதியில்; சுகாதாரத்
தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் எட்டாம் திகதி
இன்னுமொரு பெண்கள் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த விடுதியில் பணிபுரிந்து
வந்த பெண்களுடனான தகராறு காரணமாக அவர் வேலை செய்வதற்கு
சிரமப்பட்டுள்ளார். ஆனாலும் குடும்ப சூழ்நிலையால் தொடர்ந்து வேலை செய்து
வந்துள்ளார்.

நாட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாகவும் சம்பள அதிகரிப்பின்மை காரணமாகவும் பல்கலைக்கழகங்கள் பணியாளர்களைக் குறைப்பதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டுவருகின்றது என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருந்த போதும் அது அவரையும் பாதிக்கும் என அவர் அறிந்திருக்கவில்லை.

புதிய விடுதிக்கு துப்புரவுத் தொழிலாளியாக மாற்றப்பட்ட பின்னர்> அடுத்த இரண்டு
கிழமைகளில் இந்திராணி பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது இடமாற்றங்கள்
தொடர்பாகவோ அல்லது> பணிநீக்கம் தொடர்பாகவோ அவர் முறையாக
அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை. மாறாக அவர் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி பணிக்கு வந்த போது 19 ஆம் திகதிக்குப் பின்னர் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக அவரது சக ஊழியர்களிடம் இருந்து அறிந்துகொண்டார். இதன் போது அவரது மேற்பார்வையாளர் நீங்கள் பணிநீக்கப்பட உள்ளீர்கள் என்பதுடன் இம் மாதம் 19 ஆம் திகதியின் பின்னர் வேலைக்கு வரவேண்டாம் எனப் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டு அல்லது மூன்று தடவை அவர் பணிபுரிந்து வந்த தனியார்
நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு காரணம் கேட்ட போது முறையான பதில்கள்
எதுவும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பொறுப்பான அதிகாரியால்
வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்போது அவரது இரண்டு பிள்ளைகளது நலவாழ்வு சாரந்த விடயங்களில் அதிகரித்த சவாலை எதிர்நோக்குகின்றார்.
வேலையில் இருந்து பணிநீக்கம் பெற்ற சுகாதாரத் தொழிலாளி சுமதி (பெயர்
மாற்றப்பட்டுள்ளது)

எங்கள பாத்தா வேலையும் தரமாட்டாங்க ரவுணுக்க போனா கடைதெருவில கூட ஒரு
மாதிரி நடத்துவாங்க. நாலு வருசமா வேலை செய்றன். இனி வேற வேலையள் எண்டா
இனி தான் பழகோணும். நாங்கள் எதுவும் கேக்க மாட்டம் தானே பின்ன அவங்க
நினைச்ச நேரத்துக்கு நிப்பாட்டுவாங்க. எனக்கு பிள்ளையள் இல்லை. நானும் இவரும்
தான் . முதல் தோட்ட வேலைக்குத் தான் போயிட்டு இருந்தது. சரியான
வெயில் உடம்புக்கு ஏலாது. அதனால தான் உங்க போனது. அவர்கள் வழங்கிய சம்பளம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. இப்ப வேலை இல்லை இனி எங்கையும்  பாக்கோணும் .

சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 47 வயதான இவர் உடபேராதனையில் தன்
கணவருடன் வசித்து வருகின்றார். இவரது வம்சாவழி இந்தியாவைப் பூர்வீகமாகக்
கொண்டிருப்பினும் இவர் இலங்கையில் பிறந்த பெண். இவரது கணவன்
இந்தியாவினைச் சேர்ந்தவர், திருமண உறவின் அடியாக இலங்கைப் பிரசையாக
வாழ்ந்து வருகின்றார். மிகவும் வறுமையான நிலையில் பிள்ளைகள் அற்ற நிலையில்
ஒருவருக்கு ஒருவர் மிகவும் அன்புடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த நான்கு வருடமாக
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பெண்கள் விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அவருக்கு குறிப்பாக தான் எந்த நாளில் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது
தெரிந்திருக்கவில்லை. ஒரு சனிக்கிழமை அவர் வேலைக்குச் சென்ற போது அவர்
பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் தன் இறுதி
மாத ஊதியம் வழமையான ஊதியத்தினை விட குறைந்தளவே பெற்றுள்ளார்.

மேலும் அவரது பணிநீக்கம் தொடர்பாக குறித்த விடுதியில் இருந்த சுகாதாரத்
தொழிலாளர்களுக்கான மேற்பார்வையாளரிடம் இருந்தோ அல்லது தனியார் நிறுவன
மேற்பார்வையாளரிடம் இருந்தோ முறையான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.
அத்துடன் அவரிடம் கைத்தொலைபேசி இன்மையால் அவர் பணிபுரிந்து வந்த இடத்தில் யாருடனும் பழக்கம் இருந்திருக்கவில்லை அதனால் அவரால் மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுத்திருக்கமுடியவில்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன் சமகாலப் பொருட்களது விலை ஏற்றம் அவர்களது கொள்முதல் திறனை முழுமையாகத் தடைசெய்துள்ளது.
அத்துடன் தமது வீட்டில் உள்ள சிறு நிலப்பரப்பில் சிறிய தோட்டம் அமைத்து அதில்
இருந்து கிடைக்கப்பெறும் மரக்கறிகளை உண்பதாகவும் கணவர் கூலி வேலைக்குச் சென்றுவந்தபோதும் அவரது ஊதியம் போதியதாக இல்லை எனவும் குறிப்பிட்டார். அத்துடன் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை முகாமை செய்வதில்
இயலுமையற்றவர்களாகவே உள்ளனர்.

வேலையில் இருந்து பணிநீக்கம் பெற்ற சுகாதாரத் தொழிலாளி ராசையா (பெயர்
மாற்றப்பட்டுள்ளது) – உடபேராதெனிய

என்னை சென்ற வருடமே வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்கள். நான் தற்போது கூலி வேலை செய்கின்றேன். வயசு போய்விட்டது என்பதற்காக வேலையில் இருந்து நிறுத்தி இருப்பார்கள் போல. எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில நிறைய தூரம் பிள்ள என்கிறார். ராசையா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 63 வயது சுகாதாரத் தொழிலாளி.

அவர் தன் சாதியின் நிமித்தம் பொது இடம் மற்றும் தான் தொழில் புரியும் இடங்களில்
பாகுபடுத்தலுக்கும் புறக்கணிப்புக்களுக்கும் உட்பட்டுள்ளார். பேராதனைப்
பல்கலைக்கழகத்தின் ஒரு குறிப்பிட்ட குறிப்பிட்ட பீடத்தின் தூய்மைத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் வாடிகால்காலினைத் துப்புரவு செய்யவும் உணவு கழிவுகளை தரம்பிரிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இருந்தும் மேலதிகமான சிறு சிறு வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் மே மாதமளவில் பணியில் இருந்து இவர் நீக்கப்பட்ட பொது முறையான காரணங்களைப் பெறமுடிந்திருந்திருக்கவில்லை.

அவரது ஒரு மகளும் மகளினது இரண்டு பிள்ளைகளும் அவரது ஊதியத்திலேயே
வாழ்ந்து வந்தனர். வேலையில் இருந்து பணிநீக்கப்பட்ட பின்னர் தோட்ட
வேலைகளுக்குச் சென்று வந்த போதும் குடும்பத்தினது பொருளாதார செலவுகளை
ஈடுசெய்வது சவாலானதாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

விமலாதேவி (பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தற்போது சுகாதாரத் தொழிலாளியாகப் பணிபுரிபவர்) நிறைய பேரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்கள் அதனால் அதிகரித்த வேலைப்பழு இரண்டு மூன்று பேர் செய்யும் வேலைகளை நாங்களே செய்ய வேண்டியுள்ளது.

ஆனாலும் ஊதியம் அதிகரிகப்படவில்லை. மாணவர்கள் தரம்பிரித்து உணவைக் குப்பைத்தொட்டிகளில் போடவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தியும் முறையான குப்பைத்தொட்டிகளைக் கவனித்தும் நிர்வாகம் அனைத்து
நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது ஆனாலும் அது நடைமுறையில் மாணவர்கள் உரிய முறையில் பின்பற்றுவது இல்லை.

அத்துடன் கழிப்பறைகளுள் மண் மற்றும் சேற்றுக் கால்களுடன் வருகின்றனர். ஒரு நாளில் இரண்டு முறை கழிப்பறைகளை சுத்தம் செய்த போதும் அதனை தூய்மையாகப் பேண முடிவதில்லை> மிகவும் சிரமமாக உள்ளது. எங்களை பற்றியும் யோசிக்கணும் எல்லோ என்கிறார்.

விமலாதேவி 40 வயதான சுகாதாரத் தொழிலாளி. இவர் பேராதனைப்
பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட ஒரு துறையில் உள்ள ஒரு ஒரு பகுதியில் உள்ள
கட்டங்களுக்குப் பொறுப்பான சுகாதாரத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகின்றார்.

கழிப்பறைச் சுத்தம் மற்றும் உணவுக் கழிவுகளைத் தரம் பிரிப்பது மற்றும் சூழலைத்
தூய்மையாகப் பேணுவது (கூட்டுதல் மற்றும் கழுவுதல்) போன்ற பணிகளில்
ஈடுபட்டுவருகின்றார்.

அவர் அண்மைக்காலமாக இடம்பெற்ற தூய்மைத் தொழிலாளர்களது எண்ணிக்கைக்
குறைப்பால் தமக்கு ஏற்பட்டுள்ள வேலைச் சுமை தொடர்பாக பகிர்ந்து கொண்டதுடன்
பணிநீக்கம் பெற்றவர்களது தொடர்பு இன்மையாலும்> அவர்கள் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டமையாலும்> யார் யார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தம்மிடம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தரவின்
அடிப்படையில் சுகாதாரத் தொழிலாளர்களது பணிநீக்கம் காரணமாக மாணவர்கள்
தமது விடுதிகளில் குப்பைகளை தரம்பிரித்து குப்பைத் தொட்டிகளில் இடுவதற்கும்
ஏனைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும்  நடைமுறையில் அது சாத்தயமற்றதாக உள்ளது. எனவே நடப்பு நிலையில் உள்ள குறைந்தளவான ஊழியர்களுக்கு வேலைப்பழு அதிகரித்துள்ளது.

வேலை நிறுத்தம் தொடர்பான சில தனியார் நிறுவனங்கள் ஊடான கலந்துரையாடலின் அடிப்படையில்,  தனியார் நிறுவனத்தின் பணியாளர் ஒருவரிடம் வினவிய போது ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு வருடமும் தமக்கு வேண்டிய எண்ணிக்கையினை ஒரு ஏல அடிப்படையில் எமக்கு கொடுப்பார்கள் அதில் அவர்கள் வரையறுத்துள்ள எண்ணிக்கையினருக்கு எம் தொழிலாளர்களை வழங்குவோம் சிலவேளை குறித்த எண்ணிக்கை சென்ற வருடத்தில் இருந்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ காணப்படும். அந்த அடிப்படையில் இந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதியில் பணிபுரிந்து வந்த ஆறு சுகாதாரப் பணியாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர் (நடப்பு ஊழியர்களில் இருந்து அவர்களது ஒப்பந்தக் காலம் முடிவடைந்த ஆறு பேர் ஒப்பந்த நீடிப்பின்றி நீக்கப்பட்டனர்) இதில் சில பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையினரை அதிகரித்தும் உள்ளன எனக் குறிப்பிட்டார்.

பெரும்பாலான சுகாதாரத் தொழிலாளர்கள் சமூகத்தின் ஓரங்கட்டலுக்கு
உட்படுகின்றனர். அவர்களது பொருளாதாரம் அவர்களது நாளாந்த கூலிகளை
அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.

சம காலத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி அரசியல் ஸ்திரமின்மை அதிகரித்த பொருட்களின் விலை மற்றும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அவர்களது வேலை நேரத்தையும் குறைவடைய வைத்தள்ளது.

குறித்த சுகாதாரத் தொழிலாளர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் அவர்கள் பணிநிக்கம் செய்யப்பட்டுள்ள போதும் அவர்கள் அது தொடர்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை. அவர்கள் தம் ஒப்பந்த காலம் மீள நீட்டிக்கப்படுமா இல்லையா? அல்லது எப்போது ரத்து செய்யப்படும் போன்ற தகவல்களைத் தெரிந்திருக்கவில்லை. குறிப்பாக அவர்கள் இந்த ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரான பணிநீக்கத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்நிலையில் இவர்கள் முன் அறிவித்தல் இன்றிய வேலைநிறுத்தம்> தம் அன்றாட
வாழக்கைச் செலவீனங்களை முகாமை செய்வதற்கு பாரிய சவால்களை
ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டனர். அது மட்டுமல்லாது அவர்களது சமூக காரணிகளால் உடனடியாக இன்னொரு வேலையில் இணைவதற்கான இயலுமை அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.

சாதி ரீதியான பாகுபாடு, சுகாதாரத் தொழிலாளர்கள் மீதான சமூகத்தினது பாரபட்சமும் அரசின் முறையான வளப் பங்கீடின்மையும் அவர்களது பொருளாதார ரீதியான பாதிப்பிற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது. நாள் அடிப்படையிலான ஊதியம் பெறுவதனால் முறையான தொழிற்சங்க உரிமைகளை கோருவது என்பது சாத்தியமற்றதாக உள்ளது.

அத்துடன் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இடையில் ஒருங்கிணைந்த அடிப்படையில்
தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சாத்தியத்திற்கான அறிமுகமும் இல்லாது தொழில்புரிவதற்கான சூழலே உள்ளது.

இலங்கையில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட நாள் ஊதியத்திற்கு ஒப்பந்த
அடிப்படையில் தொழில்புரிபவர்களது உரிமைகள் தொடர்பாக பேராதனைப்
பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான MR.R.K.M.Rajapaksha அவர்கள் கருத்துத்
தெரிவிக்கும் போது, தனியார் நிறுவனங்களின் கீழ் நாள் ஊதிய அடிப்படையில் ஒப்பந்த வேலைமேற்கொள்பவர்களுக்கு தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு உரிமை உள்ளது.

ஆனாலும் அதன் நடைமுறைச் சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நாள்
ஊதிய ஒப்பந்த வேலையாட்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகங்கள் கூட ஊக்குவிப்பதில்லை. இது முதலாளித்துவதுவத்தின் வளர்ச்சிக்கான ஒரு வடிவமாகச் செயற்படுகின்றது எனக் குறிப்பிட்டார்.

மேலும் , இலங்கையிலும் நாள் ஊதிய வேலை செய்வர்கள் தொழிற்சங்க
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சாத்தியமற்ற நிலையே காணப்படுகின்றது.
சுகாதாரத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தவர்களாகவே காணப்படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் தொழில்புரியும் இடங்களிலும் பொது இடங்களிலும் பாகுபாட்டிற்கும் அடக்குமுறைகளுக்கும் உட்படுகின்றனர்.

இலங்கையினைப் பொறுத்தவரை சுகாதாரத் தொழில் என்பது சாதிய மற்றும் இன ரீதியான முகங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. பரம்பரை பரம்பரையாக அவர்கள் குறித்த சுகாதாரத் தொழிலைச் செய்வதற்கு பல வேறுபட்ட புலனாகாத காரணங்களால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந் நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடும் போது குறித்த தொழிலாளர்கள் தாம் வேலையில் இருந்து
நீக்கப்படுவதற்கு முன்பாக அறிவுறுத்தப்படவேண்டும். அதாவது அவர்களது ஒப்பந்த
காலம் முடியும் தறுவாயில் ஒரு மாத காலத்திற்கு முன்பாக அவர்களது ஒப்பந்த காலம் நீடிக்கப்பட உள்ளதா? அல்லது முடிவடைந்துள்ளதா? என்பது தொடர்பாக
அறிவுறுத்தப்பட வேண்டும். ஆனாலும் அது இலங்கை போன்ற நாடுகளில்
இடம்பெறுவதில்லை. அதிலும் குறிப்பாக ஒரு ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகள் தொழில் இடங்களில் அதிகமாவே மீறப்படுகின்றன.

குறிப்பாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படல் அதிகமான
வேலை நேரம், வஷைச் சொற்களுக்கு ஆளாதல், துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல்,
சுரண்டல் போன்ற பல்வேறு வகையான அநீதிகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் அவர்கள் தொழிற்சங்கமாக ஒருங்கிணைந்தாலோ அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்தாலோ அல்லது குறித்த நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தாலோ அவர்கள் ஏதேனும் காரணம் சுமத்தப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்படுவார்கள். எனவே நடைமுறை நிலை என்பது இவ்வாறு தான் உள்ளது. இந்நிலையில் இவர்களது தொழிற்சங்க உரிமைகள் தொடர்பான உரையாடல் இன்னமும் பேசுபொருளாகக்கூடவில்லை எனக் குறிப்பிட்டார்.

எனவே, அவர்கள் தம் உரிமைக்கான போராடுவது சாத்தியமற்றதாக உள்ளது.
பொதுவாக நோக்கும் போது> தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில்
தொழில்புரியும் குறித்த சுகாதார ஊழியர்கள் எந்தவொரு முறையான
முன்னறிவிப்புமின்றி பணிகளிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

அவர்களது பொருளாதார நிலை, அடையாளம், கல்வி அறிவு போன்றவற்றின் அடிப்படையில் அவர்கள் தனியார் நிறுவனங்களில் தங்கிவாழ்பவர்களாக்கப்படுகின்றனர். இதனால் தமது உரிமைகள்
மறுக்கப்படும் போதோ மீறப்படும் போதோ குரல் எழுப்ப முடியாதவர்களாகவே
உள்ளனர். குறித்த சுகாதார ஊழியர்களது பணிநீக்கம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற
தகவல்கள் ஆளுக்காள் நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

இது சுகாதாரத் தொழிலாளர்கள் சாரந்து காணப்படுகின்ற அலட்சியப்போக்கினையே
எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் இவ்வாறான பணிநீக்கமானது அவர்களது கொள்முதல் திறனில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் அவர்களது அன்றாட வாழ்க்கை தொடர்பான அச்சுறுத்தலை அதிகரிக்கச் செய்துள்ளதுடன் மிகக் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் அன்றாட வேலைகளைச் செய்யத் தூண்டியுள்ளது.

இது அவர்களது தொழில்சார் பாதுகாப்பின்மையினை புலப்படுத்துகின்றது.
இவற்றைத் தொகுத்து நோக்கும் போது ஒப்பந்த அடிப்படையிலான நாள்
தொழிலாளர்களது உரிமை என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாகும். எனவே தேசிய
மற்றும் சர்வதேச ரீதியிலான உரையாடல்கள் தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் மற்றும்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.

மேலும் தொழிற்சங்க ரீதியாக இவர்களை வலுவூட்டுவதும் இவர்களது உரிமைகள் மீறப்படும் போது அதனை ஒரு தொழிலாளர் பிரச்சனையாக முன்வைத்து செயற்படுவதும் ஒப்பந்த அடிப்படையிலான நாள் ஊதிய தொழிலாளர்களது நீடித்த நலவாழ்விற்கான தொழில்சார் உறுதிப்படுத்தலை ஏற்படுத்தும்.தொழிற்சங்கங்கள் மற்றும் Protect Union போன்ற அமைப்புக்கள் நாள் ஊதிய அடிப்படையில் வேலை செய்வரர்களது உரிமை சாரந்த உரையாடல்கனை முன்னெடுக்க வேண்டும் அவற்றின் ஊடாக தீர்வுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனாலும் முதலாளித்துவ கட்டமைப்பினுள் அது சாத்தியமற்றதொன்றாகவே காணப்படுகின்றது.

அத்துடன் சமகாலப் பொருளாதார நெருக்கடியில் இவ்வாறு தொழில்களை இழந்த
தொழிலாளர்களுக்கு அரசு உடனடியாக மாற்று தொழில்சார் வழிகளை
இனங்காட்டுவதுடன் அவர்களுக்கான புதிய தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்பட்டு
ஆரோக்கியமாக கல்வி அணுகலூடான பல்கலைக்கழக இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு பரம்பரை ரீதியாக சுகாதாரத் தொழிலாளர்களாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

Recommended For You

About the Author: S.R.KARAN