இலங்கையின் விவசாயத்துறைக்கு முதலீடு செய்ய தயாராகும் இரு நாடுகள்

இந்தியாவும் இஸ்ரேலும் இலங்கையின் விவசாயத்துறையின் அபிவிருத்திக்காக கூட்டாக முதலீடு செய்யத்திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலின் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் விவசாய மையங்களை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, அறிவு மற்றும் விவசாயத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியை வழங்கவுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு நிதியுதவி வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐந்து இடங்கள் விவசாய அமைச்சினால் அடையாளம்
பழங்கள், உருளைக்கிழங்கு, நெல் அல்லாத தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பயிர்களை வளர்ப்பதற்காக ஹொரணை, சீதா-எலிய, மஹில்லுப்பல்லம, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் கன்னோருவ ஆகிய ஐந்து இடங்களை விவசாய அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

இதனை தவிர, தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கும் திட்டமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேவை சார்ந்த இலக்குகள், பங்குதாரர்கள், பொறுப்புகள் மற்றும் மையங்களை நிறுவுவதற்கான காலக்கெடு ஆகியவற்றைக் கண்டறிவதற்காக, புதுதில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துடன் நேரடி உரையாடலை ஆரம்பிக்குமாறு, இலங்கையின் விவசாய அமைச்சு, புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முன்னோடி திட்டம் தொடர்பாக இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் பரஸ்பரம் தொடர்பு கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor