அச்சுறுத்தல் – ஆபத்திற்குள்ளாகியிருக்கும் வடக்கு; யாழ். மாநகர சபை முதல்வர் வேதனை

எங்களுடைய பிரதேசமானமானது அச்சுறுத்தலையும் ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. எனவே, வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க யாழ். நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ். மாவட்ட பெண்கள் குழு நடத்திய போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக உருவாக்குவோம்  எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்துத்தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ். மாநகர சபை முதல்வர் மேலும் தெரிவிக்கையில்:

எங்களுடைய பிரதேசமானமானது அச்சுறுத்தலையும் ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.

நாளாந்தம் வெளியாகும் பத்திரிகை செய்திகள் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகின்ற கலக்கத்தை உண்டாக்குகின்ற பயங்கரமான செய்திகளை அண்மைய காலங்களில் படித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் எவ்வாறு பாதிக்கப்படப் போகின்றார்கள் என்கின்ற அச்சத்தில் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்ற ஒரு அவல நிலைமை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய பெரியவர்களால் முன்வைக்கப்படுகின்றது. அதாவது போதைப்பொருள் வர்த்தகர்களின் பிரதான இலக்காக பாதிக்கப்படுபவராக இருப்பவர்கள் பாடசாலை மாணவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

இந்த பாடசாலை மாணவ – மாணவிகளை இலக்கு வைத்து இவ்வாறான போதைப்பொருள் விநியோகம் அண்மை காலங்களிலே அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்காலச் சந்ததி எனக் கருதப்படுகின்ற எங்களுடைய இளைஞர் – யுவதிகளை நோக்கி போதைப் பொருள் வர்த்தகம் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. அதற்குள்ளே அறிந்தும் அறியாமலும் அதனுடைய எதிர்கால விளைவுகளைப் பற்றித் தெரியாது எமது இளைஞர் – யுவதிகள் இந்தப் போதைப்பொருளுக்குள்ளே அடிமையாகிக் கொண்டிருக்கின்றமை இந்த மண்ணிலே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதிலும் விசேடமாக அரசியல் தலைமைகள். சமூகமட்ட பிரதிநிதிகள் – அதோடு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் கல்விச் சமூகம் அனைவரதும் கடமையாகும்.

எதிர்காலத்தில் இந்தப் போதைப்பொருள் பாவனைக்குள் உள்ளாகாதவாறு மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் நாங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்.  மாநகர முதல்வர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுப்பது என்பது தொடர்பில் அனைத்துத் தரப்பினருடனும் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து விரைவில் அந்த செயற்பாட்டினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன்.

பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி சமூகத்தினர் மற்றும் பொலிசார் ஆகிய அனைத்து தரப்பினரை ஒன்றிணைத்து எவ்வாறு இந்த போதைப் பொருட்களில் இருந்து எமது மாணவ சமூகத்தை காப்பாற்ற முடியும் என்ற விடயத்தினை அறிந்து அதனை செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கை விரைவில் முன்னெடுக்க உள்ளோம்

அத்தோடு போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கக் கூடிய விசேட நிலையம் ஒன்றினை யாழ். நகருக்கு அண்மையில் அமைப்பதற்கு யோசித்து வருகின்றோம். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகவே போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை சமூகத்தோடு ஒருங்கிணைக்க முடியும்.

எனவே வடக்கில் யாழ். நகருக்கு அண்மையில் ஒரு இடத்தில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றினை அமைப்பதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதற்குரிய முயற்சியை  எடுத்து வருகின்றேன். அனைவரின் ஒத்துழைப்புடன் அந்த விடயம் விரைவில் கைகூடும் எனவும் யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: webeditor