ஐந்து வாரங்கள், 102 போட்டிகளுக்குப் பிறகு FIFA உலகக் கிண்ணம் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 1930-ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஸ்பானிஷ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட இரு அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப்போட்டிக்கு களம் தயார்.
அதுமட்டுமன்றி, உலகக் கிண்ணம் மற்றும் கோபா அமெரிக்கா கிண்ணத்தின் நடப்பு சாம்பியனான ஆர்ஜெண்டீனா, யூரோ கிண்ணத்தின் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை எதிர்கொள்ளவுள்ளது.
அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என வீழ்த்தி ஸ்பெயினும், இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தி ஆர்ஜெண்டீனாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பிரம்மாண்ட இறுதிப்போட்டிக்கு முன்னதாக, அரையிறுதிப் போட்டிகள் நமக்கு உணர்த்திய 5 முக்கிய விஷயங்கள் இதோ:
1. பிரான்ஸை பந்தாடிய ஸ்பெயினின் ‘மாஸ்’ ஆட்டம்!
தன் 19-வது பிறந்தநாளுக்கு மறுநாள் களமிறங்கிய இளம் புயல் லமீன் யமால் (Lamine Yamal), பிரான்ஸின் அனுபவமிக்க லூகாஸ் டிக்னையை (Lucas Digne) ஏமாற்றி அபாரமாக பெனால்டியைப் பெற்றுத் தந்தார்.
கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாத மைக்கேல் ஒயர்சபால் (Mikel Oyarzabal) 22-வது நிமிடத்தில் அதை கோலாக மாற்றினார்.
நடுப்பளத்தில் டானி ஓல்மோ, ரோட்ரி மற்றும் ஃபேபியன் ரூயிஸ் ஆகியோரின் ஆதிக்கமும், விங் பகுதிகளில் மார்க் குகுரெல்லா, பெட்ரோ போரோவின் சிறப்பான தடுப்பாட்டமும் பிரான்ஸை திணறடித்தன. இதன் பலனாக 58-வது நிமிடத்தில் போரோ அடித்த அபார கோல் ஸ்பெயினின் வெற்றியை உறுதிசெய்தது.
ஆரம்ப போட்டியில் கேப் வெர்டேவுக்கு எதிராக 0-0 என சமன் செய்த ஸ்பெயின் அணி, டானி ஓல்மோவின் வருகைக்குப் பிறகு அசுர வளர்ச்சி கண்டுள்ளது. யூரோ 2024 தொடரைப் போலவே, இப்போதும் ஓல்மோ அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார்.
2. முடிவுக்கு வருகிறதா ‘டெஸ்சாம்ப்ஸ்’ சகாப்தம்?
பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக தனது 186-வது போட்டியில் களமிறங்கிய டிடியர் டெஸ்சாம்ப்ஸுக்கு (Didier Deschamps) எதுவுமே சாதகமாக அமையவில்லை. முன்னணி நட்சத்திரம் வில்லியம் சலிபாவின் காயம், நடுப்பளத்தில் தொடை காயத்துடன் ஆடிய சூவாமேனி, நடுவரின் முடிவுகள் என அனைத்துமே அவருக்கு எதிராக அமைந்தன.
பிரான்ஸ் அணியின் உலகக் கிண்ணப் பயணம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மூன்றாம் இடத்திற்கான போட்டிக்குப் பிறகு டெஸ்சாம்ப்ஸ் விலகி, முன்னாள் கால்பந்து புயல் ஜிநெடின் ஜிதான் (Zinedine Zidane) பிரான்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. ‘கோல் போட தேவையில்லை… நான் அசிஸ்ட் செய்வேன்’ – மெஸ்சியின் மாயாஜாலம்!
முதல் 5 போட்டிகளில் 8 கோல்கள் அடித்து ஆர்ஜெண்டீனாவைத் தாங்கிப் பிடித்த லியோனல் மெஸ்சி, அரையிறுதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால், போட்டியின் போக்கையே மாற்றும் இரு மாயாஜால ‘அசிஸ்ட்’களை வழங்கினார்!
இங்கிலாந்துக்கு எதிராக 0-1 என பின்தங்கியிருந்த நிலையில், 85-வது நிமிடத்தில் மெஸ்சி வழங்கிய பாஸைப் பயன்படுத்தி என்சோ பெர்னாண்டஸ் தூரத்திலிருந்து அடித்த கோல் ஆட்டத்தைச் சமன் செய்தது.
தொடர்ந்து சேர்க்கப்பட்ட கூடுதல் நேரத்தில், இங்கிலாந்தின் இரு தடுப்பாட்ட வீரர்களைத் தன்வசம் இழுத்து, மெஸ்சி வழங்கிய துல்லியமான கிராஸை லவுடாரோ மார்டினெஸ் கோலாக மாற்றி வெற்றி தேடித்தந்தார்.
இதன் மூலம், 2022 உலகக் கிண்ணத்திலிருந்து தொடர்ச்சியாக 11 போட்டிகளில் கோல் அல்லது அசிஸ்ட் செய்த ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை மெஸ்சி நீட்டித்துள்ளார்!
4. உணர்ச்சிப் பெருக்கில் ஆர்ஜெண்டீனா வீரர்கள்!
போட்டிக்குப் பிந்தைய பேட்டிகளின் போது ஆர்ஜெண்டீனா முன்னணி வீரர்களான லவுடாரோ மார்டினெஸ் மற்றும் ஜூலியானோ சிமியோனி ஆகியோர் கண்ணீர் விட்டு அழுத காட்சி ரசிகர்களை நெகிழ வைத்தது.
“எனது தந்தை எனக்கு முதல்முறையாக பூட் (Boot) வாங்கித் தந்த நாளிலிருந்தே இந்த வெற்றிக் கோலை அடிக்க வேண்டும் என்று கனவு கண்டேன்” என மார்டினெஸ் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.
5. தோமஸ் டுஹெலின் தவறான வியூகம்… கதறிய இங்கிலாந்து!
மெக்சிகோ மற்றும் நார்வேக்கு எதிரான போட்டிகளில் இங்கிலாந்தின் தடுப்பாட்ட வியூகம் கை கொடுத்தது. ஆனால், ஆர்ஜெண்டீனாவுக்கு எதிராக 72-வது நிமிடத்தில் தோமஸ் டுஹெல் (Thomas Tuchel) 5 தடுப்பாட்ட வீரர்களுடன் கூடிய ‘டிஃபென்சிவ்’ வியூகத்தைக் கையிலெடுத்தது அவருக்குப் பின்னடைவாக அமைந்தது.
மேலும், கோல் அடித்த அந்தோனி கோர்டனை முன்கூட்டியே வெளியேற்றியதால் இங்கிலாந்தின் ‘கவுண்டர் அட்டாக்’ வாய்ப்புகள் முற்றிலும் முடங்கின. மார்கஸ் ராஷ்போர்ட் அல்லது புகாயோ சகாவை முன்கூட்டியே களமிறக்காதது ஏன் என தோமஸ் டுஹெல் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மகுடத்திற்கான அந்த பிரம்மாண்ட இறுதிப் போரில் ஆர்ஜெண்டீனாவா அல்லது ஸ்பெயினா? வரும் ஞாயிற்றுக்கிழமை விடை தெரியும்!

