தண்டவாளம் இன்றி வீதி வழியாக வந்த புகையிரத எஞ்சின்.!!

இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தண்டவாளங்கள் ஏதுமின்றி பிரதான பொது வீதி வழியாக புகையிரத எஞ்சின் ஒன்றை இயக்கும் சவாலான நடவடிக்கை ஒன்று இன்று(03) இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.

M5 வகுப்புக்கு சொந்தமான 781 இலக்க புகையிரத எஞ்சினே இவ்வாறு வீதி வழியாக கண்டியிலிருந்து பேராதனை நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளது.

அண்மையில் வீசிய ‘டிட்வா’ புயல் காரணமாக மலையகப் புகையிரதப் பாதையின் கடுகண்ணாவ மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு இடையே புகையிரதங்களை இயக்க முடிந்தாலும், அதற்கு அப்பால் உள்ள சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு அங்கு வேறு புகையிரத எஞ்சின்கள் இல்லை.

பேராதனை ‘களுபாலம்’ பகுதியின் பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவடையாததால், கண்டியிலிருந்து பேராதனை வரையிலான புகையிரதப் பாதை தற்போதும் மூடப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே, மாற்று வழியின்றி பிரதான நெடுஞ்சாலை வழியாக புகையிரத எஞ்சினைக் கொண்டு செல்ல புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையின் மூலம், இலங்கையின் பொது வீதி ஒன்றில் உள்ள பாலம் ஒன்றின் வழியாகவும், நாட்டின் மிக நீளமான “மகாவலி கங்கை” (Mahaweli River) ஆற்றைக் கடந்து செல்லும் முதலாவது புகையிரத எஞ்சின் என்ற வரலாற்றுப் பெருமையை இந்த M5 781 எஞ்சின் பெறவுள்ளது.

இதற்கான விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது..

Recommended For You

About the Author: admin