கொழும்பில் மில்லியன்கணக்கான பண மோசடியில் சிக்கிய பிரபல நடிகை!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் பாரிய பண மோசடியில் கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், பிக்குகள் என பலரும் சிக்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த குழுவினர் திலினி பிரியமாலிக்கு வழங்கிய பணம் ஆயிரம் கோடி ரூபாவை தாண்டியுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி திகோ குழுமத்தின் கணக்குகளை சரிபார்த்த போது, ​​அந்தக் கணக்குகளின் படி குறித்த பணத்தை திலினி பிரியமாலி என்ன செய்தார் என்ற சந்தேகம் விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கான நிதி மோசடி
இந்த சந்தேகநபரின் பண மோசடிகளில் தாமும் சிக்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பல்வேறு தரப்பினர் ஊடாக சிலர் செய்திகளை அனுப்பிய போதிலும் இதுவரை முறைப்பாடுகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவு என்பதுடன், திலினி பிரியமாலியிடம் தாம் பணத்தை முதலீடு செய்யவில்லை என சுமார் 15 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த நடிகை ஒருவரிடம் விசாரணை
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை வெளிவராத பிரபல நடிகை மற்றும் வர்த்தக நிறுவனங்களை வைத்திருக்கும் மூத்த நடிகை ஒருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய நிறுவனம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
திகோ குழுமம், மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன், இது தொடர்பில் மத்திய வங்கியின் வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் திணைக்களம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் மோசடியான நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஊடகங்களில் தகவல் வெளியாகும் முன்னர் மத்திய வங்கிக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor