ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய பிரஜைகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் (UAE) நுழைவதற்கும் அல்லது அந்நாட்டு விமான நிலையங்கள் ஊடாகப் பயணம் செய்வதற்கும் (Transit) தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் (Emirates), ப்ளை துபாய் (flydubai) மற்றும் எதிஹாட் (Etihad) ஆகிய முன்னணி விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 2026 மார்ச் 31 முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களின் இணையதளங்களில் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
🚫 முக்கிய கட்டுப்பாடுகள்:
ஈரானிய கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்கள் துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட அமீரக விமான நிலையங்கள் ஊடாகப் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமீரகத்திற்கு வெளியே தங்கியிருக்கும் ஈரானிய வதிவிட விசா (Residency Visa) வைத்திருப்பவர்கள் மீண்டும் நாட்டிற்குள் திரும்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்த தெளிவான காலக்கெடு எதனையும் அமீரக அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
✅ விதிவிலக்குகள் யாருக்கு?
அனைவருக்கும் தடை விதிக்கப்பட்ட போதிலும், பின்வரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன:
கோல்டன் விசா (Golden Visa) வைத்திருப்பவர்கள்.
ஐக்கிய அரபு அமீரகப் பிரஜைகளைத் திருமணம் செய்துள்ள ஈரானியர்கள் மற்றும் அமீரகத் தாய்க்குப் பிறந்த குழந்தைகள்.
மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வங்கி நிர்வாகிகள், முதலீட்டாளர்கள் மற்றும் சிரேஷ்ட தொழில்முறை வல்லுநர்கள்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் வர்த்தகர்கள்.
இந்தத் திடீர் அறிவிப்பால் துபாய் மற்றும் அபுதாபி வழியாகப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். பயணிகள் மேலதிக விபரங்களுக்குத் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

