அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான 86 வயதான அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாகக் கூடுகிறது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை “சர்வதேச சட்ட மீறல்” எனச் சுட்டிக்காட்டி, உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என ரஸ்யா மற்றும் சீனா தீர்மானம் கொண்டுவர வாய்ப்புள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான எந்தவொரு கண்டனத் தீர்மானத்தையும் அமெரிக்கா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஈரானியத் தூதரகங்கள் சர்வதேச சமூகத்திடம் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
ஒரு நாட்டின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட இந்த நேரடித் தாக்குதலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என ஈரானியத் தூதுவர்கள் கோரியுள்ளனர்.
ஈரானியத் தலைவர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான இந்த “பயங்கரவாதத் தாக்குதலுக்கு” சர்வதேச நீதிமன்றங்கள் மூலம் நீதி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்காப்புக்காகவே தாம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதாக ஈரான் உலக நாடுகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள ஈரானியத் தூதரகம் இந்திய அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளது. பிராந்திய அமைதியை நிலைநாட்ட இந்தியா தனது இராஜதந்திர செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்றும், ஈரானின் பக்கம் உள்ள நியாயத்தை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

