மத்திய கிழக்கில் போர் பதற்றம்: பல நாடுகள் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன.
அதன்படி ஈரான், ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்களது வான்பரப்புகளை மூடியுள்ளன.
இதேவேளை இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனமும் தனது ஐரோப்பிய மற்றும் வடக்கு நாடுகளுக்கான விமானப் பாதைகளை மாற்றியமைத்துள்ளது.
மத்திய கிழக்கின் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமது வான்பரப்புகளை (Airspace) மூடியுள்ளன. இதன் விளைவாக, இலங்கையிலிருந்து பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடதிசை நாடுகளுக்குச் செல்லும் ஸ்ரீலங்கன் விமானங்கள், தற்போது சவூதி அரேபிய வான்வெளி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
விமானப் பாதைகள் மாற்றப்பட்டுள்ளதால், இலக்குகளைச் சென்றடையக் கூடுதல் நேரம் எடுக்கும் எனவும், இதனால் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
“மோதல் போக்கு காரணமாக நிலவும் நிச்சயமற்ற சூழலில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது முதன்மை நோக்கம். எனவே, பாதுகாப்பான வான்வழிப் பாதைகளைப் பயன்படுத்துவதற்காகச் சில விமானங்கள் சவூதி அரேபிய வான்பரப்பு ஊடாக இயக்கப்படுகின்றன,” என அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

