பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ முகாம் ஊழியர் – பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு!
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற நபர், பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த நபர் திடீரென அவரது கழுத்திலிருந்த சங்கிலியை அறுத்துள்ளார். இதன்போது அப்பெண் அபயக்குரல் எழுப்பவே, வீதியால் சென்ற பொதுமக்கள் துரிதமாகச் செயற்பட்டு அந்த நபரைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட நபரைச் சுன்னாகம் காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, கைதான நபர் மயிலிட்டி இராணுவ முகாமில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக (Civil Security Department) கடமையாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது குறித்த சந்தேகநபர் சுன்னாகம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

