கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளை ஆரம்பம்: யாத்திரிகர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (27) மற்றும் சனிக்கிழமை (28) ஆகிய இரு தினங்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், யாத்திரிகர்களுக்கான பயண ஒழுங்குகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை மாலை நற்கருணை ஆராதனையும், விசேட மாலை வழிபாடுகளும் நடைபெறுவதுடன் சனிக்கிழமை காலை திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
யாத்திரிகர்களின் வசதிக்காகப் போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன . அந்தவகையில் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகாட்டுவான் இறங்குதுறை வரை விசேட பேருந்துகள் இயக்கப்படும்.
குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து கச்சதீவுக்கான படகு சேவைகள் இடம்பெறும். ஒரு வழிப் பயணக் கட்டணமாக 1,200 ரூபாய் அறவிடப்படும்.
யாத்திரிகர்கள் குறிகாட்டுவான் இறங்குதுறையில் தமது தேசிய அடையாள அட்டையைக் காண்பித்து பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
வெள்ளிக்கிழமை இரவு உணவு வழங்கப்பட மாட்டாது என்பதால், யாத்திரிகர்கள் தமக்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சனிக்கிழமை காலை திருப்பலிக்கு பின் காலை உணவு வழங்கப்படும். குடிநீரையும் போதியளவு எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளை பகல் 1:00 மணிக்குப் பின்னர் படகுச் சேவைகள் இடம்பெற மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுத் திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த உயர்மட்ட மதத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவிலிருந்து சிவகங்கை மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட குருக்கள் மற்றும் துறவிகள் வருகை தருகின்றனர்.
இலங்கையிலிருந்து யாழ். மறைமாவட்ட குரு முதல்வருடன் 50-க்கும் மேற்பட்ட குருக்கள் மற்றும் துறவிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

