சர்வதேச சந்தையில் சீனா அறிமுகப்படுத்த இருக்கும் பறக்கும் கார்

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மின்சார கார்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் ஒன்று, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு இராஜியத்தின் துபாய் நகரில் பறக்கவிடப்பட்டுள்ளது.

பறக்கும் காரின் வடிவமைப்பு

ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார இறக்கைகள் இந்த காரில் இணைக்கப்பட்டு உள்ளன. அவை இந்த காரை மேலே எழும்ப செய்வதற்கும், தரையில் கீழே இறங்குவதற்கும் உதவி புரியும்.

மேலும் குறைந்த உயரத்தில் பறக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஒன்றரை மணிநேரம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆளில்லாமல் கார் இயக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் அறிமுகம்

இதுபற்றி எக்ஸ்பெங் நிறுவனத்தின் பொது மேலாளர் மின்குவான் கியூ செய்தியாளர்களிடம் கூறும்போது, “சர்வதேச சந்தையில் இதனை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

இதற்காக துபாயை நாங்கள் முதலில் தேர்வு செய்தோம். ஏனெனில், உலகில் புதுமையான நகராக துபாய் உள்ளது. அடுத்த தலைமுறைக்கான பறக்கும் காருக்கான முக்கிய அடித்தளமாக இந்த சோதனை அமையும்.”என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor