காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுங்கள்: யாழ். மாவட்ட செயலரிடம் மகஜர் கையளிப்பு!
பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்தி குழுவினர் இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்ட செயலரைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
வலி. வடக்கில் ‘உயர் பாதுகாப்பு வலயம்’ என்ற பெயரில் தசாப்தங்களாக பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என தமது கோரிக்கையில் வலியுறுத்தி உள்ளனர்.
இதேவேளை “மக்களின் காணிகள் மக்களுக்கே” என்பதே அரசாங்கத்தின் கொள்கை எனத் தெரிவித்துள்ள கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சித்திரை புத்தாண்டுக்கு முன்பாக வலி. வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க, சில அரச அதிகாரிகளின் மந்தகதியான செயல்பாடுகளும் காணி விடுவிப்பு தாமதமாவதற்கு ஒரு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
சொந்த நிலத்திற்காகப் பல வருடங்களாகக் காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் இந்த முறையாவது நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

