பிரேமலால் தொடர்பான மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு..!
கொலைக் குற்றச்சாட்டுக்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கொலைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டதாக ‘அதா தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மேன்முறையீட்டு மனு, நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாக வேண்டிய அரசாங்க சட்டத்தரணி சுகவீனமுற்றுள்ளதாக விடுக்கப்பட்ட அறிவித்தலை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அதன் விசாரணையை செப்டம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
அந்த மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக பிரேமலால் ஜயசேகர சமர்ப்பித்த மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுத்து விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என்பதால், அதனை இரத்து செய்து மீண்டும் தண்டனை வழங்குமாறு கோரி, இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

