மன்னார் குஞ்சுக்குளம் மக்களுக்கு உலங்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துகள் அனுப்பி வைப்பு..!

மன்னார் குஞ்சுக்குளம் மக்களுக்கு உலங்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துகள் அனுப்பி வைப்பு..!

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை (01) காலை ஒரு தொகுதி உலர் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு,மருத்துவ தேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முயற்சியினால் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் திங்கட்கிழமை (01) காலை 10.30 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

குஞ்சுக்குளம் மற்றும் மாதா கிராம பகுதியில் சுமார் 304 குடும்பங்களைச் சேர்ந்த 133 நபர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை, ஆலயம், பொது மண்டபங்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த உலர் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ,உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப் மற்றும் பணியாளர்கள் இணைந்து குறித்த பொருட்களை வானூர்தி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin