கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு காணுதல் தொடர்பான கலந்துரையாடல்..!
கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு காணுதல் தொடர்பான கலந்துரையாடலானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.10.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை வரவேற்றதுடன், ஏனையோரையும் வரவேற்று , கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் தீர்வுகளை காணும் நோக்கில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் வாழ்வாதாரத்தில் விவசாய மற்றும் மீன்பிடி பிரதானமானது எனவும், தேசிய வருமானமானத்தை ஈட்டும் தொழிலாக கடற்றொழில் காணப்படுவதாகவும் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் இப்பிரச்சினைகளை தொடர்பாக பிரதேச மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள், மாவட்ட மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் தேசிய ரீதியாக காணப்படும் பிரச்சினைகள் என மூன்று கோணங்களில் ஆராயப்படவேண்டும் எனவும் அதற்கு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரச்சினைகளை ஆராயந்து தீர்வு வழங்க ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், கடற்றொழி்ல் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து,
அவற்றுக்கு விரைவான முடியுமான தீர்வுகளை வழங்குவதே இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும், மீன்பிடி ஏற்றுமதியில் கடந்த வருடம் 285 மில்லியன் டொலர் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் எனவே ஏற்றுமதி மூலமாக அதிக வருமானத்தை இலங்கை பெறமுடியும் எனவும் மீன்பிடியில் நவீனமயமாக்கல் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளதாகவும், மாற்றத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அரசு பொறுப்பேற்று ஒரு வருட பூர்த்தியாகயுள்ள நிலையில் நாட்டின் அபிவிருத்தியில் ஏற்படுத்திய முன்னேற்றங்களை தொடர்பாகவும் விபரித்தார். மேலும்,
இந்திய மீனவர் படகுகள் உள்நுழைவதை தடுப்பதற்கு கடற்படையை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அதற்கான முடிவுகள் எட்டப்படும் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் கடற்றொழி்ல் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் , தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) நிறுவனங்கள்யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படுகின்ற மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக முன்வைப்புக்கள் இடம்பெற்றதுடன் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டைப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட பிராந்திய கட்டளைத்தளபதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


