இலங்கை கைதுகளைக் கண்டித்து தமிழக மீனவர்கள் ரயில் மறியல்
இலங்கை சிறைகளில் உள்ள தங்கள் சகாக்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழக மீனவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ராமேஸ்வரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ராஜா மனோகரன் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மீனவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

