![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/06/dfd.webp)
15 வயது சிறுமியொருவருக்கு இனிப்பு பண்டத்தில் மயக்க மருந்து கொடுத்து தனது நண்பர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய உதவிபுரிந்ததாக சினிமா ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை – சாலிகிராமம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
சிறுமி, தனது நண்பர்களுடன் அடிக்கடி அண்ணாநகரில் உள்ள கஃபேவுக்கு (cafe) சென்று வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் தான் சினிமா ஆடை வடிவமைப்பாளர் என பிரதிக்ஷா அகிலா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அவ்வப்போது 15 வயது சிறுமியும் பிரதிக்ஷாவும் சந்தித்து பேசிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ஒரு நாள் தனக்கு பிறந்தநாள் என்று கூறிய பிரதிக்ஷா, அந்த சிறுமியை தனது வீட்டிற்கு வருமாறு கூறினாராம்.
வீட்டிற்கு சென்ற சிறுமி
இதையடுத்து கஃபேவில் பழகிய பெண் என்பதால் 15 வயது சிறுமியும் அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியை வரவேற்ற பிரதிக்ஷா, அவருக்கு இனிப்பை கொடுத்துள்ளார். அந்த இனிப்பை சாப்பிட்டதும் சிறுமி மயங்கியுள்ளார்.
இதையடுத்து, தனது காதலன் சோமேஷ், அவருடைய நண்பர் வில்லியம்ஸ் ஆகியோரை வரவழைத்து அவர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய பிரதிக்ஷா உதவியதாக தெரிகிறது.
சிறுமியை மிரட்டிய நண்பர்கள்
மயக்கம் தெளிந்ததும் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என சிறுமியை பிரதிக்ஷாவும் சோமேஷும் மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து விருகம்பாக்கம் பொலிஸார் பிரதிக்ஷாவையும் சோமேஷையும் கைது செய்தனர். நண்பர் வில்லியம்ஸ் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை தேடி வருகிறார்கள்.
குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.