தென்னிலங்கையில் உலக சாதனை படைத்த நாயகன்

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் ஏஷ் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே இழுத்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் 1000 மீற்றர் தூரத்திற்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக இருந்தது.

அதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய ஏஷ் பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தாடியாலும், 500 மீற்றர் தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் அந்த உலக சாதனையை நிகழ்த்தினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனை புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் இந்த சாதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வத்தின் சாதனையை அங்கீகரித்து, பதக்கத்தையும் விருதையும் பட்டயத்தையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களால் வழங்கி வைத்தனர்.

60வது வயதில் சாதனை நாயகன்

சாதனை நாயகனான செல்லையா திருச்செல்வம் (60) கடந்த பத்தாண்டுகளாக தனது தலைமுடியாலும், தாடியாலும் வாகனங்களை இழுப்பது, தனது உடலின் மீது வாகனத்தை ஓடவிடுவது போன்ற சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்.

60 வயதான சாதனை நாயகன் அண்மையில் சாவகச்சேரி பஸ் நிலையத்தின் அருகில் 1550 கிலோ எடையுள்ள வாகனத்தை 1500 மீற்றர் தூரம் வரை 45 நிமிடங்களில் இழுத்து சாதனை படைத்துள்ளார்.

இம்முறை செல்லையா திருச்செல்வத்தின் சாதனை சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து இலங்கையர்களுக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin