மாலைத்தீவில் நங்கூரமிடப்பட்ட சீன ஆய்வுக் கப்பல்

இந்தியாவின் பலத்த கவலைகளுக்கு மத்தியில் சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுக் கப்பலொன்று வியாழன் அன்று மாலைத்தீவை சென்றடைந்துள்ளது.

சீனாவின் இயற்கை வள அமைச்சுக்கு அறிக்கை அளிக்கும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான “சியாங் யாங் ஹாங் 3” (Xiang Yang Hong 3) என்ற கப்பலானது கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பயணம் மேற்கொண்டு மலைத்தீவு தலைநகரான மலோயில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

கப்பலின் வருகைக்கு முன்னர் அது இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே மூன்று வாரங்களுக்கும் மேலாக நீர்நிலைகளை ஆய்வு செய்ததாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் வெளிக்காட்டுவதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் விளக்கம்

விஞ்ஞான புரிதலுக்கு பயனளிக்கும் வகையில் இந்த கப்பல் பயணம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா, கப்பல் இந்தியப் பெருங்கடலில் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் கூறியது.

இந்தியாவின் கவலை

குறித்த கப்பலானது சீனாவின் இராணுவத்தைச் சேர்ந்ததாக இல்லாத நிலையிலும், அது இந்திய பெருங்கடலில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

கப்பலின் மாலைத்தீவு பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்பு அதிகாரியொருவர், சியாங் யாங் ஹாங் 3 கப்பல் சேகரிக்கும் தரவு பொதுமக்கள் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்று கூறினார்.

இந்தியப் பெருங்கடலுக்கு பலமுறை பயணம்

குறித்த கப்பல் இந்தியப் பெருங்கடலுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளது..

இது 2021 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் உள்ள சுந்தா ஜலசந்தி வழியாக பயணித்து, இந்தோனேசிய அதிகாரிகளை அச்சுறுத்தியது.

இலங்கையின் ஆட்சேபனை

2022 ஆம் ஆண்டில், ராக்கெட் மற்றும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் திறன் கொண்ட யுவான் வாங் 5 என்ற சீனாவின் இராணுவக் கப்பல் கொழும்புக்கு வந்து இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தியது.

இறுதியாக 2023 ஒக்டோபரில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இலங்கையில் வந்து நிறுத்தப்பட்டது, இது இந்தியாவின் கவலைகளுக்குப் புத்துயிர் அளித்தது.

எனினும், ஜனவரியில் சியாங் யாங் ஹாங் 3 கப்பல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள தீவு நாடு தனது ஆட்சேபனையினை வெளியிட்டது.

மாலைத்தீவு – சீன உறவு

சியாங் யாங் ஹாங் 03 கப்பலின் வருகை ஜனவரி மாதம் மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் சீனாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளது.

எனினும் அண்மைக்காலமாக விரிசலடைந்து வரும் இந்தியா மற்றும் மாலைத்தீவு இடையிலான உறவுகளுக்கு இது மற்றுமோர் அடியாக பார்க்கப்படுகிறது.

மாலைத்தீவின் விளக்கம்

கப்பல் அதன் நீரில் எந்த ஆராய்ச்சியும் செய்யாது, பணியாளர்கள் சுழற்சி மற்றும் பொருட்களை நிரப்புவதற்கு மட்டுமே நிறுத்தப்படும் என்று மாலைத்தீவு கூறியுள்ளது.

Recommended For You

About the Author: admin