டி20 தொடரை வென்றது இலங்கை!

ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

இலங்கை – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளையில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க – குசல் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் ஆறு ஓவர்களிலேயே இலங்கை அணி 55 ரன்களைச் சேர்த்தது.

அதன்பின் 25 ரன்கள் எடுத்திருந்த பதும் நிஷங்கவின் விக்கெட்டை அஸ்மதுல்லா ஒமார்சாய் கைப்பற்றினார். அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த குசல் மெண்டிஸ் ஃபசல்ஹக் ஃபரூக்கு பந்துவீச்சில் நூர் அஹ்மதிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

பின்னர் இணைந்த தனஞ்செய டி சில்வா – சதீர சமரவிக்ரம இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சமரவிக்ரம ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் தனஞ்செய டி சில்வா 11 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கேப்டன் வனிந்து ஹசரங்க 22 ரன்களிலும் என அடுத்தடுத்து முகமது நபி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.

 

அதன்பின் களமிறங்கிய சரித் அசலங்க 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து சமரவிக்ரமாவுடன் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீரா சமரவிக்ரம சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதீர தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபக்கம் ஆட்டமிழக்காமல் இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் – கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் ஒரு ரன்னிலும், இப்ராஹிம் ஸத்ரான் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து ஏஞ்சலோ மேத்யூஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் அணியின் நட்சத்திர வீரர்கள் ரஹ்மனுல்ல குர்பாஸ் 13, குல்பதின் நைப் 4, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த முகமது நபி – கரிம் ஜானத் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட முகமது நபி 27 ரன்களுக்கும், கரிம் ஜானத் 28 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

Recommended For You

About the Author: admin