விரைவில் இலங்கை வர இருக்கும் கோட்டபாய

கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு உரிய அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டை விட்டு அழகான சூழலில் செல்லவில்லை, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இந்த நாட்டிற்கு வரும்போது அவருக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பொருத்தமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சொந்த பணத்திலேயே செலவீனம்
இதேவேளை, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என தெரிவித்து, மக்கள் சுமார் நான்கு மாத காலம் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்த போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையில், கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் வாசஸ்தலம் ஆகியவற்றை பொது மக்கள் கைப்பற்றியிருந்தனர்.

இதையடுத்து, தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், கடந்த மாதம் 13ம் திகதி மாலைத்தீவு சென்று, அங்கிருந்து 14ம் திகதி சிங்கப்பூர் பயணமானார். சிங்கப்பூரிலிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பிய கோட்டாபய ராஜபக்ச, சிறிது காலம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்தார்.

அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து கடந்த 11ம் திகதி தாய்லாந்து நோக்கி தனது மனைவியுடன் பயணித்த அவர், தற்போது அங்கு தங்கியுள்ளார்.

வெளிநாட்டில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவின் செலவீனங்கள் அனைத்தும், அவரது சொந்த பணத்திலேயே செலவிடப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது

Recommended For You

About the Author: webeditor