பொலிஸ் எச்சரிக்கை : உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் Factseeker

பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்த அறிவிப்பின் உண்மைத்தன்மை தொடர்பில் Factseeker உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதாக ஒரு செய்தி வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பகிரப்பட்டு வந்தது.

குறித்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறியத்தருமாறு Factseekerரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், Factseeker இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

“விலையுயர்ந்த கடிகாரங்களை அணியாதீர்கள்.

விலையுயர்ந்த மாலைகள், வளையல்கள், காதணிகள் அணியாதீர்கள்.

உங்கள் கைப்பைகள் தொடர்பில் கவனமாக இருங்கள்.

ஆண்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த சங்கிலிகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் விலை உயர்ந்த கையடக்க தொலைபேசிகளை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள்.

அந்நியர்களை வாகனத்தில் அழைத்துச் செல்வதை தவிர்க்கவும்.

தேவைக்கு அதிகமான பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம்.

நீங்கள் பயணம் செய்யும் போது உங்கள் வங்கி அட்டை மற்றும் கடன் அட்டையினை பாதுகாப்பாக வைத்திருங்கள்” என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் வினவிய நிலையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்பட்ட குறித்த அறிவிப்பு தவறானது என்பதை Factseeker உறுதிப்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin